Politics
தவெக நிர்வாகியை ஓட ஓட வெட்டி வெறிச்செயல்..! பின்னணியில் இருப்பது யார்? தலைநகரை உலுக்கிய 2 சம்பவங்கள்..!
தலைநகர் சென்னையில் ஒரே இரவில் இரண்டு கொலைகள் அரங்கேறியது பொதுமக்கள் இடையே பீதியை கிளப்பியுள்ளது.
சென்னை வண்ணான்துறை பகுதியில் வசித்து வந்தவர் கண்ணன். ஐடி நிறுவனங்களுக்கு கார்களை வாடகைக்கு விட்டு தொழில் செய்து வந்த இவர் அதிமுகவில் வட்ட செயலாளராக இருந்து வந்தார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் அதிமுகவில் இருந்து விலகிய கண்ணன், தன்னை தவெகவில் இணைத்துக் கொண்டார்.
தவெக நிர்வாகி வெட்டிக் கொலை..!
கடந்த சனிக்கிழமையன்று இரவு வண்ணான்துறை, ராமசாமி அவென்யூ, எல்லையம்ன் கோயில் தெருவில் கண்ணன் தனியாக நின்று கொண்டிருந்ததை பார்த்த, அவரது சித்தி மகன் புருஷோத்தமன் மற்றும் புருஷோத்தமனின் நண்பர்கள் கண்ணனோடு பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, இரண்டு இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்த வந்த ஐந்து பேர் கையில் அரிவாளோடு கண்ணனை தாக்க முயன்றனர்.
கண்ணனுடன் நின்றவர்கள் அங்கிருந்து ஓட, ஹெல்மெட் அணிந்த மர்ம நபர்கள் கண்ணனை காலால் உதைத்து கீழே தள்ளியதோடு, அரிவாளால் சரமாரியாக வெட்ட ஆரம்பித்தனர். கீழே கிடந்த கல்லை எடுத்து கண்ணனின் தம்பி, அந்த மர்ம நபர்கள் மீது வீசி கண்ணனை காப்பாற்ற முயன்றும், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. கழுத்தில் சரமாரியாக வெட்டிய அந்த கும்பல், பின்னர் கால்களிலும் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றனர். இவை அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. தாக்குலில் படுகாயமடைந்த கண்ணன் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார்.
தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை..!
இது குறித்து கண்ணனின் தம்பி புருஷோத்தமன், சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
கொலையாளிகள் ஐந்து பேரும் 20 வயதுடையவர்கள்
தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை செய்து கொலை வழக்கில் தொடர்புடைய பரணி (20), .ராகேஷ் (20), நரேஷ் (20), மணிகண்டன் (20) ஹரிஹரன் (20 ) ஆகிய 5 பேரை கைது செய்தனர். இவர்கள் ஐந்து பேரும் 20 வயதுடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தபோது, உயிரிழந்த கண்ணன், சாஸ்திரி நகர் காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி என்பதும், போலீசார் இவரது நடவடிக்கைகளை தொடர்ந்து நேரடியாகவும், ரகசியமாகவும் கண்காணித்து வந்ததும் தெரியவந்தது.
பழிக்கு பழியாக நடந்த கொலை?
சென்னை அடையார் பகுதியைச் சேர்ந்த சிவா தரப்புக்கும் - திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த மங்களேரி கந்தன் தரப்புக்கும் இடையே மாமுல் வசூல், கேபிள் தொழில், கட்ட பஞ்சாயத்து உள்ளிட்ட விவகாரங்களில் முன் விரதம் இருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 2009 ஆம் ஆண்டு அடையார் பகுதியில் பரணியின் பெரியப்பா சிவா என்பவர், கந்தனின் ஆதரவாளரான கண்ணன் ஆகியோரால் கொலை செய்யப்பட்டார். பதிலுக்கு 2013 ஆம் ஆண்டு கந்தனை சிவா தரப்பினர் கொலை செய்தனர்.
அதன் பிறகு 2016 ஆம் ஆண்டு சைதாப்பேட்டை பகுதியில் பரணியின் தந்தை வேலு கொலை செய்யப்பட்டார். தந்தையை கொலை செய்த ஆத்திரத்தில் இருந்த பரணி மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து கண்ணனை கொலை செய்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
இன்ஸ்பெக்டர் மற்றும் DCP காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்..!
இரு ரவுடி கும்பல்களுக்கு இடையே நடக்கும் இந்த மோதல் மற்றும் கொலை விவகாரம் தொடர்பாக கண்காணிக்க தவறிய சாஸ்திரி நகர் காவல் ஆய்வாளர் ரோகினி மற்றும் சம்பவம் நடந்த அடையாறு காவல் மாவட்ட துணை ஆணையர் கார்த்திகேயன் ஆகிய இருவரையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அடித்து கொன்ற போதை ஆசாமிகள்.!
சென்னை நொளம்பூர் அருகே மதுபோதையில் வந்த 4 இளைஞர்கள் அங்கிருந்த கட்டிட வேலை செய்து வந்த தொழிலாளிகளிடம் பீடி மற்றும் மது கேட்டு மரக்கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.