Politics
“வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறேன்...” - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டில் ஓய்வெடுத்து வருவதாக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “எனது உடல்நலம் குறித்து அன்போடு விசாரித்த அனைவருக்கும் நன்றி...வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட காய்ச்சலைத் தொடர்ந்து, மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறேன். இதன் காரணமாக, ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கழகப் பொதுச் செயலாளரின் அறிவுறுத்தலின்பேரில் ஒத்திவைக்கப்பட்ட முப்பெரும் விழாவிற்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள், கலையுலக நண்பர்கள் எனது அலுவலகத்தைத் தொடர்புகொண்டு, எனது உடல்நலம் குறித்து அன்போடு விசாரித்துள்ளனர். கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமின்றி, பிற கட்சிகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் காட்டிய அன்பிற்கும் அக்கறைக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவர்களின் அறிவுரைப்படி, இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வீட்டிலேயே ஓய்வெடுக்க உள்ளேன்.
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான நேற்று, கழக உடன்பிறப்புகள் மேற்கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்தேன். அதேபோல், நாளை செப்டம்பர் 17 அன்று தந்தை பெரியாரின் பிறந்தநாளையும், திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட நாளையும் கழக உடன்பிறப்புகள் எழுச்சியுடன் கடைப்பிடிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். நாளை தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதுடன், தலைமைக் கழகம் அறிவித்துள்ளபடி, சமூகநீதி நாள் உறுதிமொழியை அனைத்து கழக அலுவலகங்களிலும் ஏற்றிட வேண்டும். கழகத்தின் 78-ஆம் ஆண்டு தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், கழகக் கொடிகளைப் புதுப்பித்து ஏற்றிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)