Arts, culture, entertainment and media
30 ஆண்டு நட்பும் போட்டியும்.. விஜய் - அஜித் எனும் நட்சத்திர பிம்பங்கள்.. லண்டனில் நடக்கும் சுவாரஸ்யம்!

Vijay - Ajith | வெள்ளித்திரையில் 30 ஆண்டுகளாக ரசிகர்களை என்டர்டெயின் செய்தவர்கள். இன்று வெவ்வேறு களத்தில் சந்திக்கிறார்கள்.
திரையில் இரு துருவங்கள்... ரசிகர்களைப் பொறுத்தவரை, எப்போதும் போட்டியாளர்கள்... ஆனால், தனிப்பட்ட வாழ்க்கையில் நண்பர்கள்... மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் கோலோச்சிய விஜய், அஜித் என்ற இரு பெரும் நட்சத்திரங்களை மீண்டும் ஒரு புள்ளியில் இணைத்துள்ளது இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் கார் பந்தயம்.
1990-களின் தொடக்கம்... தமிழ் சினிமாவில் இரண்டு இளம் நடிகர்களின் வருகை ரசிகர்களை சிலாகிக்க வைத்தது. ஒருவர் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன் விஜய். மற்றொருவர்... சினிமா குடும்பப் பின்னணி இல்லாமல், விளம்பரங்கள் மற்றும் சிறிய கதாபாத்திரங்கள் மூலம் திரைத்துறைக்குள் வந்த அஜித்குமார்.
இருவரின் தொடக்கமும் வெவ்வேறு பாதையாக இருந்தாலும், 1995-ஆம் ஆண்டு ராஜாவின் பார்வையிலே என்ற திரைப்படம் இருவரையும் ஒன்றிணைத்தது. ஒரே திரைப்படத்தில் இணைந்து நடித்த இந்த இரண்டு இளம் நடிகர்களும், எதிர்காலத்தில் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய போட்டியாளர்களாக மாறுவார்கள் என்று அப்போது யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.
அஜித்துக்கு ஆசை, காதல் கோட்டை, வாலி, அமர்க்களம் என அடுத்தடுத்து வெற்றிகள் கிட்ட, விஜய்க்கு பூவே உனக்காக, லவ் டுடே, காதலுக்கு மரியாதை என இளைஞர்கள் மத்தியில் தனி இடம் கிடைக்கத் தொடங்கியது. இருவரது ரசிகர் வட்டமும் வேகமாக பெரிதாகத் தொடங்கிய போதுதான், அஜித் vs விஜய் என்ற போட்டி உருவானது. அஜித்துக்கு தல, விஜய்க்கு தளபதி என இரண்டு பட்டங்களும் ரசிகர்களின் அடையாளமாக மாறின.
யார் பெரிய ஹீரோ, யாருடைய ஓப்பனிங் பெரியது, யாருடைய படம் அதிக வசூல் என ஒவ்வொரு திரைப்பட வெளியீட்டிலும் போட்டிக்கு பஞ்சமிருக்காது. தீனா – ஃபிரண்ட்ஸ், வில்லன் - பகவதி, ஆஞ்சனேயா – திருமலை என பொங்கல், தீபாவளிகளில் திரையரங்குகளில் திரைப்படங்கள் நேருக்கு நேர் மோதும்போது, ரசிகர்களுக்கு அது தனி திருவிழாதான்.
2007 பொங்கலுக்கு அஜித்தின் ஆழ்வார் வெளியான போது, விஜய்யின் போக்கிரி, வசூலை தட்டி தூக்கியது. 2014 பொங்கல் போட்டியில் ஜில்லாவை பின்னுக்கு தள்ளி வீரம் முதலிடம் பிடித்தது. இப்படி, ஆட்டம் ஒவ்வொரு முறையும் கைமாறியது.
தனிப்பட்ட முறையில் நட்பு என்ற எல்லையை அஜித்தும் விஜயும் மீறியது இல்லை என்றாலும், இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன என்றும், ஒருதடவை ஜெயிப்பதெல்லாம் சரித்திரம் ஆகாது என்றும் ஒருவரை ஒருவர் சீண்டி பார்த்த வசனங்களும் பாடல் வரிகளும் இரு பெரும் ரசிகர் பட்டாளங்களுக்கும் டானிக் ஊட்டின. இந்த போட்டிகள், பேனர்கள், கட் அவுட்கள், பாலபிஷேகத்தை தாண்டி, வசூல் கணக்குகள், சமூக வலைத்தள ஹேஷ்டேக்குகள் என கால ஓட்டத்தில் வெவ்வேறு வடிவங்களைப் பெற்றன.
இவையனைத்துக்கும் முற்றுப்புள்ளி, 2023 பொங்கலுக்கு வெளியான துணிவு, வாரிசு திரைப்படங்கள் என்பது ரசிகர்களுக்கு பேரிடி என்று சொல்லலாம். விஜய், தனது மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக்கியதும், தனது பேஷனாக இருந்த ரேஸிங்கை அஜித் கேரியராக மாற்றியதும் அந்த புள்ளியில் தான்.
இந்த 3 ஆண்டுகளில் ஒருவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர். இன்னொருவர் சர்வதேச மோட்டார் பந்தய வீரர். இதற்கு கூடுதல் சுவாரஸ்யமூட்டும் வகையில், லண்டன் சில்வர்ஸ்டோனில் நடைபெறும் Michelin Le Mans Cup கார் பந்தயத்தில் தனது அணிக்காக அஜித் களம் இறங்கும் நிலையில், முதலீடுகளை ஈர்க்க செல்லும் முதலமைச்சர் விஜய் அந்தப் போட்டியைத் தொடங்கி வைக்கிறார். மூன்று தசாப்தங்களாக போட்டியையும் நட்பையும் ஒரே நேரத்தில் சுமந்து வந்த தமிழ் சினிமாவின் இரண்டு பெரும் நட்சத்திரங்களின் கதையில், இன்னொரு மறக்க முடியாத காட்சியாக அது அமையும் என்றால் மிகையல்ல!
