Religion
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்! 12 கோபுரங்களில் கலசங்களுக்கு புனித நீராட்டு!!

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா கோலாகலம்...
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்.
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா வியாழக்கிழமை காலை கோலாகலமாக நடைபெற்றது.
தமிழகத்தின் ஆன்மிக அடையாளங்களுள் ஒன்றாகவும், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாகவும் விளங்கும் உலகப் புகழ்பெற்றது மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான வரலாறு மட்டுமின்றி, தமிழ்மொழி, சங்கம், கலை மற்றும் பண்பாட்டின் தொன்மையான மையமாகத் திகழும் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில், 2009 ஆம் ஆண்டு குடமுழுக்கிற்குப் பின்னர் 17 ஆண்டுகளுக்குப் பிறகு, குடமுழுக்கு நடைபெறுவதையொட்டி, புனரமைப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன. இதனையொட்டி மதுரை மாநகர் விழாக் கோலம் பூண்டு, மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.
திருக்குட நன்னீராட்டு விழாவை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் 5 லட்சம் டன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கோயில் முழுவதும் வாழை மரங்கள் மற்றும் தோரணங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
நேற்று (செப். 16) காலை 6 மணிக்குள் தட்சிணாமூர்த்தி, துர்க்கை, லெட்சுமி, பத்ரகாளி, 63 நாயன்மார்கள் மற்றும் கொடி மரங்கள் உள்பட 414 பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றது. குடமுழுக்கை முன்னிட்டு கோயிலில் உள்ள 4 கோபுரங்கள் உள்பட 12 கோபுரங்களுக்கும் நிலை மாலைகள் சாற்றப்பட்டன.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்.
குடமுழுக்கு விழாவுக்கான யாகபூஜைகள் கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி தொடங்கின. இதற்காக அமைக்கப்பட்ட 183 யாக குண்டங்களில், செப். 11-ஆம் தேதி முதல் சிறப்பு வேள்விகள் நடைபெற்று வந்தன. திருக்குட நன்னீராட்டு விழாவை முன்னிட்டு செப். 11 முதல் 17-ஆம் தேதி வரை நடைபெற்று வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு 12-ஆம் கால யாகபூஜை நிறைவடைந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து காலை 5.45 மணிக்கு புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. கும்பாபிஷேகத்திற்காக வடக்கு ஆடி வீதியில் 184 யாக குண்டங்கள் மற்றும் 56 யாகசாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. அம்மனுக்கு 33 யாக குண்டங்களும், சுவாமிக்கு 23 யாக குண்டங்களும் அமைக்கப்பட்டிருந்தன.
புனித நீர் கலசங்களில் நீர் நிரப்புவதற்காக புண்ணிய நதியான கங்கையிலிருந்து 1,008 லிட்டர் புனித நீரும், மேலும் 7 புண்ணிய நதிகளிலிருந்து 1,008 லிட்டர் புனித நீரும் கொண்டு வரப்பட்டிருந்தது. 9 வகையான தானியங்கள், மூலிகைப் பொடிகள், ஆலங்குச்சி, அரசங்குச்சி, பசுநெய் உள்ளிட்ட 96 வகையான ஹோமப் பொருள்களைக் கொண்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
யாகசாலை பூஜைகள் மற்றும் திருக்குட நன்னீராட்டு விழாவில் 300-க்கும் மேற்பட்ட பட்டர்கள் பங்கேற்று பூஜைகளை முன்நின்று நடத்தினர்.
தமிழ் ஓதுவார்களின் வேத மந்திரங்களும், மேளதாள வாத்தியங்களும் முழங்க காலை 7.40 மணிக்கு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் தங்க விமானங்கள், ராஜகோபுரங்களுக்கு புனித நீர் உற்றப்பட்டது. திருக்கோயிலில் உள்ள 12 கோபுரங்களில் உள்ள கலசங்களுக்கும் புனித நீர் உற்றப்பட்டு, நன்னீராட்டு விழா நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து ராஜ கோபுரங்களுக்கு சிறப்பு பூஜைகள், தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. கோயில் வளாகம், ஆடி, சித்திரை வீதிகளில் குழுமியிருந்த பக்தர்களுக்கு குடமுழுக்கு புனித நீர் ஸ்பிரிங்க்ளர் மூலம் தெளிக்கப்பட்டது.
அப்போது, கருடன் எனக் கருதப்படும் பருந்து வானில் வட்டமிட பக்தர்களின் ‘அரோகரா’... கோஷத்தால் விண்ணதிர்ந்தது. ராஜகோபுரங்களைத் தொடர்ந்து அன்னை மீனாட்சி, சுந்தரேசுவரர் சன்னதிகளுக்கும் புனித நீர் உற்றப்பட்டது.
திருக்கோயில் வளாகம், கோபுரங்கள், விமானங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வண்ண விளக்குகள் மற்றும் லேசர் மின் விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
கோயில் மேற்கூரையில் நின்று திருக்குட நன்னீராட்டு விழாவை காண்பதற்காக குடமுழுக்கில் பங்கேற்க 3 ஆயிரம் உபயதாரர்கள், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட பொது மக்கள் 2 ஆயிரம் பேர் உள்பட 11 ஆயிரம் பேருக்குப் பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. சித்திரை வீதிகள், ஆவணி மூல வீதிகள் மற்றும் மாசி வீதிகளில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதில் கோயிலின் மேல்தளத்தில் 9 ஆயிரம் பேர் வரை அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த நிகழ்வில் பல்வேறு மடங்களின் ஆதீனங்கள், அமைச்சர்கள் அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், உயர்கல்வித் துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
பொதுமக்கள் கூடும் சித்திரை வீதி, ஆவணி மூல வீதி மற்றும் மாசி வீதிகளில் 26 இடங்களில் தலா 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன. 40 இடங்களில் நிரந்தர மற்றும் தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டிருந்தன.
குடமுழுக்கையொட்டி, சுமார் 1 லட்சம் பேருக்கு தடபுடலான விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயில் உள்புறம் மற்றும் வெளிப்புறங்களில் 27 இடங்களில் 54 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. 70 மருத்துவர்கள், 150 மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட 275 பேர் அடங்கிய மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் இருந்தனர்.
மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் 60 படுக்கை வசதிகளுடன் சிறப்பு அவசரகால மருத்துவப் பிரிவு அமைக்கப்பட்டிருந்தது. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் என 24 அவசர ஊர்திகளும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன. பாதுகாப்பு பணிகளை கண்காணிக்க 433 கண்காணிப்பு கேமிராக்கள் மற்றும் 70 அதிநவீன FRS கேமிராக்கள் மூலம் கட்டுப்பாட்டு அறையில் கண்காணிப்பு பணிகள் நடைபெற்றன.
மதுரை மாநகர காவல் ஆணையாளர் தலைமையில் 6,500 காவல்துறையினர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 40 குற்றத்தடுப்பு காவலர்கள் குழுவினர் கோயிலை சுற்றிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
கூட்ட நெரிசலில் குழந்தைகள் காணாமல் போவதைத் தடுக்கும் வகையில் குழந்தைகளின் கைகளில் கண்காணிப்பு பட்டைகள் அணிவிக்க 10 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. பொதுமக்களுக்கு உதவிட கோயிலை சுற்றிலும் 10 இடங்களில் காவல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டிருந்தன.
சி2 ரவுண்டானா, எல்லீஸ் நகர், டிபி ரோடு, வெஸ்டர்ன் பார்க் ஹோட்டல் உள்ளிட்ட 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மதுரையின் 51 முக்கிய சந்திப்புகளில் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
The grand consecration ceremony (Kumbabishekam) at the Arulmigu Meenakshi Sundareswarar Temple in Madurai took place with great fanfare on Thursday morning. Lakhs of people, including ministers and Members of Parliament, participated in the event and offered their prayers.
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.