Politics
CM Vijay | விஜய்க்கு எதிர்ப்பு தெரிவித்த ப.சிதம்பரம்... தயாநிதி மாறன் சொன்ன 2006 சம்பவம்!

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்யின் பேச்சு குறித்து திமுக எம்பி தயாநிதி மாறன் பதில் கொடுத்துள்ளார்.
சட்டப்பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்குப் பதில் அளித்து பேசிய முதலமைச்சர், பெண்களை தனிப்பட்ட முறையில் தரம்தாழ்ந்து பேச வேண்டாம் என கேட்டுக்கொண்டார். கடந்த ஆட்சியில் 7.5 சதவிகிதம் முதல் 10 சதவிகிதம் வரை Party Fund வாங்கப்பட்டதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது என முதலமைச்சர் விஜய் தெரிவித்தார். Party Fund மூலம் மு.க.ஸ்டாலின், உதயநிதி பயன்பெற்றதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார். ஆதாரத்தை பக்கத்தில் வைத்துக் கொண்டே திமுகவினர் ஆதாரத்தை கேட்பதாகவும் முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.
அதேபோல் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தனது பதவியை தவறாகப் பயன்படுத்தியதாக, சர்க்காரியா குழு அறிக்கையை சுட்டிக்காட்டி முதலமைச்சர் விஜய் விமர்சித்தார். 1970-களில் வீராணம் திட்டக் குழாய் டெண்டர் தொடர்பாக கருணாநிதியின் மருமகன் முரசொலிமாறன் 40 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும் முதலமைச்சர் குற்றம்சாட்டினார். Mr. Clean என கூறுபவர்கள் அப்போதே ஊழல் செய்துள்ளனர் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
இந்த விமர்சனங்களுக்கு திமுக எம்பியும், முரசொலி மாறனின் மகனுமான தயாநிதி மாறன் பதில் கொடுத்திருக்கிறார். அவர் வெளியிட்ட பதிவில், "ஊழலைப்பற்றிப் பாடம் எடுக்கும் உத்தமரே. ஊரெங்கும் நடக்கும் கொலைகளுக்கும் அமலாக்கத்துறைக்கும் என்ன தொடர்பு?. அமலாக்கத்துறையில் அதிக வழக்குகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் கட்சியோடு கூட்டணி வைத்திருப்பது யார்? அரசியல் காரணமாக அவர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு ஆவணங்களையும் முதலமைச்சர் அடுத்த முறை வாசிப்பாரா?. உலக நாடுகள் முன்னிலையில் இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்தவர் என் தந்தை மறைந்த முரசொலி மாறன். வல்லரசு நாடுகளுடன் வாதிட்ட வல்லமையாளர். உள்ளூர் பத்திரிகையாளர்களைச் சந்திக்கவே அஞ்சும் ஒரு முதலமைச்சர் முரசொலி மாறனை பற்றிப் பேசலாமா?.
இன்று அவரைக் கொச்சைப்படுத்தும் முதலமைச்சர், அதே முரசொலி மாறனின் மகனான எனது அழைப்பை ஏற்று, ஜனவரி 2006-இல், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற, “பொங்கல் சிறப்பு தபால் தலை” வெளியிடும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருந்த சமயத்தில், விஜய் மீது வருமானவரி வழக்கு நிலுவையில் உள்ளதால், அஞ்சல்தலை வெளியிடும் நிகழ்ச்சியில் விஜய்யை மேடையில் ஏற்றக் கூடாது என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எதிர்ப்பினை கடுமையாக தெரிவித்தப்போது, உடனடியாக அதற்கு ஆட்சேபனையைத் தெரிவித்து, விஜய்யை மேடையில் நிற்க வைத்து, தபால் தலையை பெறுவதற்கான உரிய மரியாதையை வாதாடி அவருக்கு பெற்றுத் தந்தது முரசொலி மாறன் மகன்தானே?.
அந்த தபால் தலையை பெற்றுக் கொண்டு சிரிக்கும்போது, இப்போதைய ஞானோதயம் இல்லாமல் ஞானசூனியமாக இருந்தாரா?. முதலில், ஊழலைப் பற்றியோ மிசாவைப் பற்றியோ பேசும் அருகதை இந்த முதலமைச்சருக்கு உள்ளதா?. போர்பந்தரில் பிறந்தவரின் வாரிசாக தன்னைத் தானே யாரும் நினைத்துக் கொள்ளக்கூடாது. இந்த வீராதி வீரர் கொடநாட்டில் தனது திரைப்படத்திற்காக, ஒருநாள் முழுவதும் அங்கேயே காத்திருந்து, வீடியோவில் கைகட்டி வாய்பொத்தி முனகியதையும் மறந்துவிடலாகாது.
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லத் தெரியவில்லை என்றால் இப்படித்தான் ஆகஸ்ட் 2026-இல் நடந்த கொலைகளுக்கு எமெர்ஜென்சி காலத்தில் அமைக்கப்பட்ட சர்க்காரியா ஆணைய அறிக்கையில் பதில் தேட வேண்டியிருக்கும். தேடி முடிக்கும் முன் அடுத்த கொலைகள் நடந்தேறிச் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது" என்று தயாநிதி மாறன் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
