Economy, business and finance
ரூ.2,000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் கிடையாது: மத்திய அரசு
புதுடெல்லி,ரூ.2 ஆயிரத்துக்கும் அதிகமான யுபிஐ வணிகப் பணப்பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், ரூ.2 ஆயிரம் வ

ரூ.2 ஆயிரத்துக்கும் அதிகமான யுபிஐ வணிகப் பணப்பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், ரூ.2 ஆயிரம் வரையிலான யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கக்கூடாது என்று மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் யுபிஐ பெரும் பங்கு வகிக்கிறது. பெட்டிக்கடை முதல் பெரிய வணிக வளாகம் வரை தற்போது யுபிஐ பயன்பாடு உள்ளது. நொடிப்பொழுதில் பணத்தை அனுப்பவும், பெறவும் முடிவதால் சாமானிய மக்கள் முதல் வியாபாரிகள் வரை அனைத்து தரப்பினரும் யுபிஐ வழியாக பணம் அனுப்புவதை விரும்புகிறார்கள். யுபிஐ பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதிகரித்து வரும் பரிவர்த்தனைகளை கையாள்வது, சர்வர் உள்ளிட்ட தொழில்நுட்ப கட்டமைப்புகளை பராமரிப்பது போன்றவற்றுக்கு வங்கிகள் மற்றும் கட்டண சேவை நிறுவனங்களுக்கு அதிக செலவு ஏற்படுகிறது. இதன் காரணமாக, யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எம்டிஆர் எனப்படும் வணிகர் தள்ளுபடி கட்டணத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று இத்துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன.
இதற்கிடையே, ரூ.2 ஆயிரத்துக்கும் அதிகமான யுபிஐ வணிகப் பணப்பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகின. இந்த தகவல் பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ரூ.2 ஆயிரம் வரையிலான யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கக்கூடாது என்று மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், ரூபே டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கும் வங்கிகள் மற்றும் சேவை நிறுவனங்கள் எந்தவித கட்டணமும் வசூலிக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2007-ம் ஆண்டின் பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 10 ஏ-ன் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்பட உள்ளதாக பரவி வந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரத்தில் 2 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டாலும் அது வாடிக்கையாளர்கள் மீதே நிறுவனங்கள் மறைமுகாக திணிக்கும் என்ற ஆதங்கமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.