Politics
“சடார்ன்னு உட்கார்ந்தவங்க, படார்ன்னு எழுந்திருக்க முடியல” - திமுகவை கிண்டலடித்த அமைச்சர் ராஜ்மோகன்!

3 நாள் விடுமுறைக்குப் பின் தமிழக சட்டப்பேரவை நேற்று (07-09-26) கூடியது. அப்போது காவல்துறை மீதான விவாதத்தின் போது சட்ட ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேட்ட கேள்விகளுக்கு முதல்வர் விஜய் பதிலளித்தார். அப்போது முதல்வர் விஜய், திமுக குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கடுமையாக விமர்சித்து ஆவேசமாகப் பேசினார்.
முதல்வர் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். குறிப்பாக எ.வ.வேலு, கே.என்.நேரு உள்ளிட்ட திமுக தலைவர்கள் சபாநாயகரை நோக்கி கேள்விகளை எழுப்பினர். சபாநாயகர் இருக்கை முன்பு கூடியிருந்த திமுகவினர் சிலர், முதல்வர் விஜயிடமே பேச அனுமதி அளிக்க வலியுறுத்துமாறு கேட்டுக் கொண்டனர்.
முதல்வர் விஜயும் சபாநாயகரிடம் வாய்ப்பு கொடுங்க என்று வலியுறுத்திக் கூறினார். அதனை தொடர்ந்து பேசுவதற்கு வாய்ப்பு கொடுப்பதாகக் கூறினார். அப்போது, தரையில் அமர்ந்திருந்த திருவையாறு தொகுதியின் திமுக எம்.எல்.ஏ துரை சந்திரசேகரன் எழுந்திருக்க முடியாமல் தவித்தார். அப்போது முதல்வர் விஜய் உடனே எழுந்து நின்று, அவரின் கையை பிடித்து தூக்கிவிட்டு துரை சந்திரசேகரன் எழுந்திருந்த உதவி செய்தார். அதன் பின்னர், அனைத்து திமுக எம்.எல்.ஏக்களும் தங்களது இருக்கையில் அமர்ந்தனர்.
முதல்வர் விஜய் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு திமுக பதிலளிக்க அனுமதி தருவதாகக் கூறியிருந்த சபாநாயகர் திடீரென்று பதில் அளிக்க அனுமதி அளிக்க முடியாது எனத் திட்டவட்டமாகக் கூறினார். இதனால் எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி உள்ளிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதனை தொடர்ந்து, வணிகவரி, பத்திரப்பதிவு, வனத்துறை ஆகிய துறைகளின் மீது மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “அவை மாண்பை உடைத்து தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது கூட இங்கே இடம் ஃபுல் ஆகிடும்னு நினைத்தேன், ஆனால் அதற்கும் வாய்ப்பு இல்லை ஏனென்றால் அவர்களுக்கு அவ்வளவு உறுப்பினர்கள் இல்லை. வேகமாக சடார்ன்னு உட்கார்ந்துட்டாங்க.. ஆனால் படார்ன்னு எழுந்திருக்க முடியவில்லை. அதை பார்த்து சிரித்துக் கொண்டிருந்த எங்கள் முதல்வர் தான், கை கொடுத்து தூக்கி விட்டார். தரையில் அமர்ந்த திமுக, தூக்கிவிட்ட தவெக என்பது போல் தான் இருந்தது” என்று நகைச்சுவையாக கிண்டலடித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)





