Economy, business and finance
இபிஎப்ஓ ஊதிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு: பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி
சென்னை,இபிஎப்ஓ ஊதிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு: உழைக்கும் வர்க்கத்தின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி என்று நயினார் நாகேந்திர

இபிஎப்ஓ ஊதிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு: உழைக்கும் வர்க்கத்தின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
பாரத பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் கட்டாய பங்களிப்பிற்கான மாத ஊதிய உச்சவரம்பை ரூ.15,000-லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்த வரலாற்று சிறப்புமிக்க ஒப்புதலை வழங்கியுள்ளது.
இதன் மூலம், 51 லட்சத்துக்கும் அதிகமான கூடுதல் தொழிலாளர்கள் நேரடியாக சட்டப்பூர்வ சமூகப் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்படுவார்கள். குறிப்பாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை மாத ஊதியம் பெறும் முறைசார் துறையை சேர்ந்த தொழிலாளர்களுக்கு இது மிகப்பெரிய நிதி பாதுகாப்பை உறுதி செய்கிறது.
இந்தத் திட்ட விரிவாக்கத்திற்காக மத்திய அரசு அடுத்த 5 ஆண்டுகளில் தோராயமாக ரூ.56,696 கோடி செலவிட திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் புதிய பணியாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி சேமிப்பு மட்டுமின்றி, ஊழியர் ஓய்வூதியத் திட்டம் வாயிலாக முதுமைக் கால ஓய்வூதியமும், ஊழியர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஆயுள் காப்பீட்டு பாதுகாப்பும் முழுமையாக கிடைக்கும்.
நாட்டின் வளர்ச்சி நாயகனாகவும், தொழிலாளர்களின் காவலனாகவும் திகழும் பிரதமர் மோடியின் இத்தகைய தொழிலாளர் நலன் காக்கும் தொலைநோக்கு முடிவை மனதார பாராட்டுவதோடு, உழைக்கும் மக்களின் சார்பாக அவருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளைதெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.