Politics
'12 ஏக்கரில் பல்கலைக்கழகமா? யாரை குஷிப்படுத்த இந்த அவசரச் சட்டம்?'- ஆவேசமான கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு

தமிழக அரசு அண்மையில் சட்டமன்றத்தில் தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் சில முக்கிய திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. ஒரு பல்கலைக்கழகம் அமைப்பதற்கான குறைந்தபட்ச நிலப்பரப்பு மற்றும் வைப்பு நிதி ஆகியவற்றைக் கணிசமாகக் குறைப்பதே இந்த சட்டத்திருத்தத்தின் முக்கிய நோக்கமாகும். கல்வித் துறையில் இந்த அறிவிப்பு பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. இது கல்வி வளர்ச்சிக்கானதா அல்லது குறிப்பிட்ட சில கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமாகச் செய்யப்பட்டதா என்ற கேள்விகள் பரவலாக எழுந்துள்ளன.
இதுகுறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு நக்கீரன் டிவிக்கு கொடுத்த நேர்காணலில் அவருடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியதாவது,"தமிழக அரசு 2019ஆம் ஆண்டின் தனியார் பல்கலைக்கழகச் சட்டத்தில் ஒரு புதிய திருத்தத்தை 2026-ல் கொண்டு வந்துள்ளது. இதற்கு முன்பு ஒரு தனியார் பல்கலைக்கழகம் தொடங்க வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 100 ஏக்கர் நிலம் தேவை என்ற விதி இருந்தது. ஆனால், தற்போதைய திருத்தத்தின்படி, சென்னை போன்ற பெருநகரங்களில் 12 ஏக்கர் நிலம் இருந்தால் போதும் என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மற்ற மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் 18 ஏக்கரும், இதர பகுதிகளில் 25 ஏக்கரும் இருந்தால் போதும் என நிலத்தின் தேவை மிகக் கடுமையாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல், இதற்கான அறக்கட்டளை வைப்புத் தொகை 50 கோடி ரூபாயிலிருந்து 25 கோடி ரூபாயாகப் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. அரசுத் தரப்பில் பேசும் போது, உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை உருவாக்குவதற்காகவும், நிலத் தேவையை எளிமையாக்குவதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால், ஒரு பல்கலைக்கழகம் என்பது வெறும் பத்துக் தடிமங்கள் கொண்ட அடுக்குமாடிக் கட்டிடம் அல்ல. அது ஒரு வணிகக் கடையோ அல்லது கோச்சிங் சென்டரோ கிடையாது. பல்கலைக்கழகம் என்பதில் விளையாட்டு மைதானங்கள், பிரம்மாண்டமான நூலகங்கள், நவீன ஆய்வகங்கள், மற்றும் மாணவர்கள் சுதந்திரமாகச் சிந்திப்பதற்கான பரந்த இடவசதி ஆகியவை இருக்க வேண்டும்.
அறிவியல் பூர்வமான எந்தவொரு ஆய்வும் இல்லாமல், திடீரென 12 ஏக்கர், 18 ஏக்கர் என அரசு எப்படித் தீர்மானித்தது? ரவுண்டாக 25 அல்லது 50 ஏக்கர் என்று சொல்லாமல், இந்த எண்களைக் குறிப்பிடுவதன் பின்னணியில் பலத்த சந்தேகம் எழுகிறது. ஏற்கனவே ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நிறுவனம் 12 அல்லது 18 ஏக்கர் நிலத்தை வைத்துக் கொண்டு பல்கலைக்கழகம் தொடங்கக் காத்திருக்கிறதா, அவர்களுக்குப் பலன் சேர்க்கவே இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது. சட்டமன்றக் கூட்டத்தொடரின் இறுதி நாளில், தன்னை ஆதரிக்கும் கூட்டணிக் கட்சிகளிடம் கூட முன்கூட்டியே விவாதிக்காமல் இவ்வளவு அவசரமாக இந்தச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டிய அவசியம் என்ன வந்தது?
சபாநாயகர் நேரலையில் ஏறிட்டு கூட பார்க்காமல் 'ஆம்' என்ற சத்தம் அதிகமாக இருக்கிறது என்று கூறி அவசரமாகச் சட்டத்தை வாசித்து நிறைவேற்றுகிறார். இது முற்றிலும் ஜனநாயக மாண்புகளுக்கு எதிரானது" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

