Politics
தனியார் பல்கலை துவங்குவதற்கான விதிமுறை தளர்வுக்கு வந்தது எதிர்ப்பு
கோவை: தனியார் பல்கலை துவங்குவதற்கான 100 ஏக்கர் நிலம் வேண்டும் என்ற விதி தளர்த்தப்பட்டு, சென்னையில் 12, பிற நகராட்சிகளில் 18, ஊரகப் பகுதிகளில் 25 ஏக்கர் இருந்தால் போதும் என மாற்றப்பட்டுள்ளது.
மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:
தனியார் பல்கலைகள் தரமான கல்வி, எதிர்கால வளர்ச்சிக்கு தேவையான கட்டமைப்புகளை கொண்டிருக்க, 100 ஏக்கர் நிலம் தேவை என்ற விதி நிர்ணயிக்கப்பட்டது.
தமிழகத்தில் உயர்கல்வி சேர்க்கை விகிதம் 49 சதவீதமாக உள்ள நிலையில், 5 ஏக்கரில் தனியார் பல்கலை துவங்க அனுமதிக்கப்பட்டுள்ள பீகாரில், அது 17 சதவீதமாக உள்ளது.
எனவே, தனியார் பல்கலைகளுக்கான விதிகளை தளர்த்த வேண்டிய அவசியம் தமிழகத்துக்கு இல்லை.
தனியார் பல்கலை துவங்க அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை ரூ.50 கோடியில் இருந்து ரூ.25 கோடியாக குறைத்திருப்பதும் தவறான முடிவு.
குறைந்த பரப்பில் துவங்கப்படும் பல்கலைகள் எதிர்காலத்தில் மூடப்படும் நிலை ஏற்பட்டால், மாணவர்களின் கல்வியை பாதுகாப்பதில் சிக்கல் ஏற்படும்.
எனவே, உயர்கல்வித் தரத்தை கருத்தில் கொண்டு, சட்டத்திருத்த மசோதாவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
