Politics
பேரவையிலிருந்து திமுக எம்எல்ஏக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய காவலர்கள்!
பேரவைத் தலைவர் இருக்கை முன்பாக அமளியில் ஈடுபட்ட திமுகவினரை காவலர்கள் வெளியேற்றியது பற்றி....
அமளியில் ஈடுபட்ட திமுகவினரை காவலர்கள் வெளியேற்றிய போது.... - TN assembly
சர்க்காரியா கமிஷன், மிசா ஆகியவை குறித்து முதல்வர் ச.ஜோசப் விஜய் பேசியவற்றை அவைக் குறிப்பிலிருந்து நீக்கக் கோரி, பேரவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு திமுக எம்எல்ஏ-க்கள் செவ்வாய்க்கிழமை கடும் அமளியில் ஈடுபட்டனர்.
"முதல்வரின் பேச்சு பேரவை விதிகளை மீறிய செயல் அல்ல' எனக் கூறிய பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், பேரவைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி திமுக எம்எல்ஏ-க்களை வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பேரவையில் திங்கள்கிழமை உள்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் ஜோசப் விஜய், திமுக மீது சர்க்காரியா கமிஷன், மிசா, அமலாக்கத் துறை ஆவணத் தகவல்களைக் குறிப்பிட்டு பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அதற்கு, திமுக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். அதனால் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச பேரவைத் தலைவர் வாய்ப்பு வழங்க மறுத்ததால், திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்த நிலையில், சட்டப்பேரவை செவ்வாய்க்கிழமை கூடியதும், சர்க்காரியா கமிஷன் அறிக்கை, மிசா விவகாரம் குறித்த முதல்வரின் பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்கக் கோரி திமுகவினர் கோரிக்கை விடுத்தனர்.
மரபை மீறிய முதல்வரின் பேச்சு-எ.வ.வேலு: இது தொடர்பாக திமுக கொறடா எ.வ.வேலு பேசியதாவது: முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உள்துறை மானியக் கோரிக்கையின்போது, கண்ணியமாகவே பதிலுரை ஆற்றியுள்ளனர்.
ஆனால், முதல்வர் ஜோசப் விஜய் அவை மரபை மீறி பேசியுள்ளார். நீதி விசாரணையில் இருப்பதை அவையில் பேச அனுமதியில்லை. எனினும், முதல்வர் விஜய் பேசியபோது நாங்கள் அமைதியாகவே இருந்தோம். அமலாக்கத் துறை அறிக்கையை வாசிக்கத் தொடங்கிய பின்னர்தான் திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஜனநாயகத்துக்கு எதிராக வந்த மிசா சட்டத்தில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் இருந்தார். முரசொலி மாறன் குறித்து முதல்வர் பேசினார்; அவைக்குள் இல்லாதவர் பற்றிப் பேசக்கூடாது என விதியில் உள்ளது.
கருணாநிதி மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை என சர்க்காரியா கமிஷனே கூறிவிட்டது. குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லாததால் வழக்குத் தொடர முடியாது என்று சர்க்காரியா கமிஷன் கூறிவிட்டது. முதல்வர் ஆதாரம் இன்றி, பேசிய அனைத்தையும் அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.
பேரவைத் தலைவர்: முதல்வர் ஜோசப் விஜய் மரபை மீறி எதுவும் பேசவில்லை. எனவே, அவரது பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்க முடியாது.
இதையடுத்து, திமுக எம்எல்ஏக்கள் பேரவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர். அதற்கு பேரவைத் தலைவர் கடும் கண்டத்தைத் தெரிவித்ததுடன், அவரவர் இருக்கையில் அமரும்படி கூறினார்.
அவை முன்னவர் கே.ஏ.செங்கோட்டையன்: பேரவையில் 2 நாள்களாக அமளியில் ஈடுபடும் திமுக எம்எல்ஏக்களை வெளியேற்ற வேண்டும்.
பேரவைத் தலைவர்: திமுக கொறடா பேச அனுமதி வழங்குகிறேன்; அவர் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம் என்றார்.
ஆனால், திமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்து அவையில் அமர்ந்து முழக்கமிட்டனர். எனவே, அவையிலிருந்து திமுக எம்எல்ஏக்களை வெளியேற்றும்படி அவைக் காவலர்களுக்கு பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து அவைக் காவலர்கள் திமுக எம்எல்ஏக்களை குண்டுக்கட்டாக வெளியேற்றினர்.
அவை மரபை முதல்வர் மீறவில்லை: பேரவைத் தலைவர்
திமுக எம்எல்ஏ-க்கள் வெளியேற்றப்பட்டவுடன் பேரவைத் தலைவர் பேசியதாவது: பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் பேசியதை திமுக எம்எல்ஏக்கள் ஒரு நிமிஷம்கூட கவனிக்கவில்லை. முதல்வர் விஜய் அவை மரபையோ, அவை மாண்பையோ குலைக்கும் வகையில் பேசவில்லை. மிசா காலத்தில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டது குறித்து முதல்வர் குறிப்பிட்டது உண்மையான செய்தியே. அதேபோல், சர்க்காரியா கமிஷன் குறித்தும் பலமுறை பேரவையில் பேசப்பட்டுள்ளது.
பேரவையில் திமுக எம்எல்ஏக்கள் எனது அனுமதியின்றி பதாகைகளைக் காட்டியது ஏன்? முதல்வர் பேசிய எதையும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கத் தேவையில்லை என்றார்.
2017-இல் பரபரப்பை ஏற்படுத்திய திமுக எம்எல்ஏக்கள் முற்றுகை
தமிழக பேரவையில் பேரவைத் தலைவரை முற்றுகையிடுவது, அமளியில் ஈடுபடுவது போன்றவை பலமுறை நிகழ்ந்துள்ளது. இதற்கு முன்பு, 2017 பிப்ரவரி 18-ஆம் தேதி எதிர்க்கட்சியாக இருந்த திமுகவினர் பேரவைத் தலைவரை முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அன்றைய தினம் அப்போதைய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். அப்போது திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தின. அவைத் தலைவராக இருந்த பி.தனபால் அதை ஏற்க மறுத்தார். இதையடுத்து திமுக எம்எல்ஏக்கள் அவைத் தலைவரை முற்றுகையிட்டனர்.
அவரின் இருக்கையைச் சூழ்ந்தனர். மேஜைகள், நாற்காலிகள் உடைக்கப்பட்டன. மைக்குகள் பிடுங்கி வீசப்பட்டன, ஆவணங்கள் கிழிக்கப்பட்டன, சில எம்எல்ஏக்கள் மேஜைகள் மீது ஏறினர். சில திமுக எம்எல்ஏக்கள் அவைத் தலைவர் இருக்கையில் அமர்ந்தனர். அவைத் தலைவர் தனபால் தள்ளுமுள்ளில் சிக்கினார். பின்னர், அவைக் காவலர்கள் அவரைப் பாதுகாப்பாக வெளியே அழைத்துச் சென்றனர்.
Police personnel evicted DMK MLAs from the Assembly
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
