Religion
விநாயகர் சிலைகள் கரைக்க 22 இடங்கள் தேர்வு ரசாயன வர்ண சிலைகள் பயன்படுத்த தடை
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தி தினத்தன்று சிலைகளை கரைக்க, 22 இடங்களை மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்துள்ளது. ரசாயன வர்ணம் கலக்காத சிலைகளை மட்டும் கரைக்க, திருவள்ளூர் கலெக்டர் கவிதா அறிவுறுத்தியுள்ளார்.
விநாயகர் சதுர்த்தி திருவிழா, வரும் 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தியை கொண்டாட பக்தர்களும், ஹிந்து அமைப்பினரும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக, மாவட்டம் முழுதும் விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில், சிலை அமைப்பாளர்கள் ஆர்வமாக ஈடுபட்டுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி முடிந்ததும், தாங்கள் பிரதிஷ்டை செய்து, வழிபட்ட சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று, நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். அவ்வாறு சிலைகள் கரைக்கும் இடங்களை, மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்துள்ளது.
இதுகுறித்து, திருவள்ளூர் கலெக்டர் கவிதா கூறியதாவது:
நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில், விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும் போது, சிலைகளை கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் வழிகாட்டுதல், www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது.
இதை கடைப்பிடித்து, மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே, விநாயகர் சிலைகளை கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
விநாயகர் சிலைகளை, களி மண்ணால் மட்டுமே செய்து நீர்நிலைகளில் கரைக்க வேண்டும். ‘பிளாஸ்டர் ஆப் பாரிஸ்’ ‘பிளாஸ்டிக்’ தெர்மாகோல் கலவையில்லாத, சுற்றுச்சூழலை பாதிக்காத மூல பொருட்களால் உருவான சிலைகள் மட்டுமே நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
