Politics
மு.க. ஸ்டாலின் மிசாவில்தான் கைது செய்யப்பட்டாரா? அவையில் காரசார விவாதம்!

முதல்வரின் நேற்றைய பதிலுரையை அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது.
அமைச்சர் நிர்மல் குமார், திமுக கொறடா எ.வ. வேலு - படம்: சட்டப்பேரவை
முதல்வரின் நேற்றைய பதிலுரையை அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது என்றும் அமலாக்கத்துறை குற்றச்சாட்டு குறித்துதான் முதல்வர் பேசியிருக்கிறார் என்றும் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார்.
முந்தைய திமுக ஆட்சியில் கட்சி நிதி என்ற பெயரில் அரசுத் துறை ஒப்பந்தங்கள், டாஸ்மாக்கில் பெருமளவு நிதி வசூலிக்கப்பட்டதாகவும், இதில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரடிப்பயனாளிகள் என்றும் சட்டப்பேரவையில் முதல்வர் சி. ஜோசப் விஜய் நேற்று குற்றஞ்சாட்டினார்.
சட்டப்பேரவை இன்று(செப். 8) கூடியதும் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது பேசிய திமுக கொறடா எ.வ. வேலு, “நீதிமன்ற விசாரணையில் இருக்கும் வழக்குகள் குறித்து முதல்வர் பேசியிருக்கிறார். பலமுறை இதே அவையில் பேசப்பட்ட சர்க்காரிய அறிக்கை குறித்தும் அவதூறாக பேசியிருக்கார்.
குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்றுதான் சர்க்காரியா ஆணையம் சொன்னது. சர்க்காரியா ஆணையம் முடித்து வைத்ததை தவறு நடந்ததுபோல முதல்வர் பேசியுள்ளார்.
முதல்வர் ஆதாரமில்லாமல் பேசி இருக்கிறார். காவல் துறை மானியம் தொடர்பான தகவலைத் தவிர்த்து, மிசா, மாறன் குறித்து முதல்வர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்” என்றார்.
இதனைத் தொடர்ந்து பேசிய சட்டத் துறை அமைச்சர் நிர்மல் குமார், ”மிசா காலகட்டத்தில் திருட்டு, வழிப்பறி, பெண்கள் குறித்த வழக்குகளில் கைது செய்யப்பட்டிருக்கலாம்; ஆனால், எல்லாமே மிசாவில் கைது செய்யப்பட்டதாக எடுத்துக்கொள்ள முடியாது.
முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டார் என எந்த குறிப்பிலும் இல்லை. இரா. செழியன் மொழிபெயர்த்த புத்தகத்திலும் அப்படி குறிப்பிடப்படவில்லை” என்றார்.
இதனைத் தொடர்ந்து பேசிய சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், ”முதல்வர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டிய அவசியமில்லை, அமலாக்கத் துறை குற்றச்சாட்டைதான் முதல்வர் விஜய் கூறியிருக்கிறார்.
முன்னாள் முதல்வர் ஸ்டாலின், மிசாவில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட செய்தி உண்மையான செய்திதான், அது பற்றி முதல்வர் பேசவில்லை" என்றார்.
Assembly Speaker J.C.D. Prabhakar has stated that the Chief Minister's reply from yesterday cannot be expunged from the House records, noting that the Chief Minister had spoken specifically regarding the allegations made by the Enforcement Directorate.
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.