Politics
அமெரிக்காவின் 100% வரி: "ஏற்கெனவே கூறியபடி மக்களின் நலன்தான்..." - இந்தியாவின் பதில் என்ன?
100% வரி விதிக்கும் அதிகாரம் ட்ரம்ப்புக்கு கிடைத்துள்ள நிலையில், இந்தியாவின் எரிசக்தி, வர்த்தக மற்றும் பொருளாதார நலன்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் - அரசு |India says it is closely monitoring the US Russia sanctions law and will take steps to protect its energy, trade and economic interests.

ரஷ்யா தடைகள் சட்டம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேறிய நிலையில், அடுத்தகட்ட நகர்வுகளை உன்னிப்பாகக் கண்காணிப்பதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகள் மீது 100 சதவிகித வரி விதிப்பதற்கான அமெரிக்காவின் சட்டத்திற்கு, அந்நாட்டின் கீழ்சபையிலும், மேல்சபையிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அடுத்து, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தச் சட்டத்தில் கையெழுத்திட்டால், இது அமலுக்கு வந்துவிடும்.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் சீனாவிற்கு அடுத்து இந்தியாதான் உள்ளது.
இதனால், அமெரிக்காவின் 'ரஷ்ய தடை சட்டம்' அமலுக்கு வந்தால், இந்தியப் பொருள்கள் மீது அமெரிக்கா 100 சதவிகித இறக்குமதி வரி விதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'அமெரிக்காவின் இந்தச் சட்டம் பிற நாடுகளின் இறையாண்மையைப் பாதிக்கும்' என்று வலுவான குரல் எழுந்து வந்தன.
அமெரிக்காவின் இந்த நகர்வு குறித்து மத்திய அரசு எந்த எதிர்வினையையும் ஆற்றவில்லை என்று இந்தியாவில் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன.
இந்த நிலையில், அமெரிக்காவின் இந்தச் சட்டம் குறித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது...
> அமெரிக்க நாடாளுமன்றத்தில் 'ரஷ்யா மற்றும் ஈரான் மீதான தடை சட்டம்' (Sanctioning Russia and Iran Act) நிறைவேற்றப்பட்டுள்ளதை இந்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளது. இது தொடர்பான அடுத்தகட்ட நகர்வுகளை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்.
> ஏற்கனவே பலமுறை தெளிவுபடுத்தியபடி, 140 கோடி இந்திய மக்களின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்தியா உறுதியாக உள்ளது. சந்தை மாற்றங்கள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப, பல்வேறு மூலங்களிலிருந்தும் எரிபொருளைப் பெற்று இந்தப் பாதுகாப்பை இந்தியா தொடர்ந்து உறுதி செய்யும்.
> கடந்த சில மாதங்களில், அமெரிக்கப் பிரதிநிதிகளுடனான உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளின்போது இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனால் இருதரப்பு உறவுகளில் மட்டுமின்றி, சர்வதேச எரிசக்தி சந்தையிலும் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்தியத் தரப்பால் மிகத் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
> மேலும், நாட்டின் வர்த்தக மற்றும் பொருளாதார நலன்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த நகர்வுகளால் ஏற்படும் தாக்கங்களை எதிர்கொள்ள, இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைப்புகளுடன் அரசு இணைந்து செயல்படும்
