பட்டியல் சமூக மாணவர்கள் செருப்பைத் தலையில் வைத்துச் செல்லும்படி சாதி வெ*றியர்கள் மிரட்*டல்!

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை அடுத்த கரிக்குப்பம் கிராமத்தில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகளைத் தடுத்து நிறுத்தி, செருப்பைக் கழற்றி தலையில் வைத்துச் செல்லுமாறு அப்பகுதியில் உள்ள சாதி ஆதிக்க மனநிலையில் உள்ள சாதி வெறியர்கள் மிரட்டியதாகக் காவல்நிலையத்தில் புகார்
கடலூர் மாவட்டம் கரிக்குப்பம் கிராமத்தில் பட்டியல் சமூகத்தினர் சார்பில் விநாயகர் சிலை ஊர்வலமாக பொதுச் சாலை வழியாக எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பட்டியல் சமூகத்தினர் விநாயகர் சிலையைச் சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் சி.பி.எம் மற்றும் கிராம மக்களிடம் காவல்துறை நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் காவல்துறையினர் பாதுகாப்புடன் சிலை பொது வழியாக எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த நிலையில், செப்டம்பர் 15ஆம் தேதி காலை பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் பொதுச் சாலை வழியாகப் பள்ளிக்குச் சென்றபோது, ஆதிக்கச் சாதி மனநிலையில் உள்ள சில இளைஞர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி, செருப்பைக் கழற்றி தலையில் வைத்துக் கொண்டு செல்லுமாறு மிரட்டியுள்ளனர். இதனால் அச்சமடைந்த மாணவர்கள், நடந்த சம்பவத்தைப் பெற்றோர் மற்றும் ஊர் மக்களிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் கைகலப்பாக மாறியது. இதுகுறித்து இருதரப்பினரும் பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதனால் கரிக்குப்பம் பகுதியில் சாதிய மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக அப்பகுதியில் உள்ளவர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் விஜய் கூறுகையில் விநாயகர் சிலையை பொதுச் சாலை வழியாக எடுத்துச் சென்றதற்காக ஒரு சமூகத்தினரை ஒடுக்க முயற்சிப்பது கண்டனத்திற்குரியது. சாதி ரீதியான மோதலைத் தூண்டும் வகையில் செயல்படுபவர்களை அடையாளம் கண்டு, உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.
விநாயகர் சிலையை பொதுச் சாலை வழியாக எடுத்துச் செல்லக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கூட்டமாக ஒன்று கூடியவர்கள் மீதும் இதுவரை காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை. காவல்துறையினரிடையே நிலவும் சாதிய பாகுபாடு மனநிலையும் இதுபோன்ற சம்பவங்களுக்குக் காரணமாகிறது. எனவே, இருதரப்பு மக்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில், சுமுகமான தீர்வு ஏற்படுத்த காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
