விநாயகர் ஊர்வலத்திற்கு அனுமதி; காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: விநாயகர் சிலை வைத்து வழிபடவும், ஊர்வலத்திற்கும் அனுமதி வழங்கும்படியும் சென்னை உயர் நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், காட்டுபாளையம் பகுதியில், விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தவும், ஊர்வலமாக எடுத்து செல்லவும், போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதற்கான, விண்ணப்பத்தை பரிசீலிக்கும்படி, மாவட்ட எஸ்.பி.,க்கு உத்தரவிடக் கோரி இந்து முன்னணி அமைப்பின், திருப்பூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.அன்புமணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு, நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது: ஒலிப்பெருக்கி மட்டுமே பயன்படுத்த, அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தனர். அதன்பின் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும், யாசீன்பாபு நகர் பகுதியில், விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரினர்.
அப்பகுதியில், இரண்டு மசூதிகள் அமைந்திருப்பதால், விநாயகர் சிலை வைப்பதற்கான இடத்தை தேர்வு செய்ய, காவல்துறை அதிகாரிகள், மனுதாரருடன் நேரில் கள ஆய்வு செய்தனர்.
அதன்படி, யாசீன்பாபு நகர் 8வது குறுக்கு தெரு, பாண்டி மளிகை கடைக்கு அருகே, சிலை வைத்து கொள்ள, இடம் அடையாளம் காணப்பட்டது. அதை மனுதாரர் தரப்பினர் ஏற்றுக் கொண்டனர்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, சிலை வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கும்படி, மாவட்ட எஸ்.பி.,க்கு உத்தரவிட்டார்.