Arts, culture, entertainment and media
தீபாவளிக்கு மறுநாள் (நவ. 9) - ரயில் டிக்கெட் முன்பதிவு: கடும் அதிருப்தியில் பயணிகள்!

தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு தொடர்பாக...
தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர் சென்று திரும்பிவர ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (செப். 10, வியாழக்கிழமை) காலை தொடங்கிய ஓரிரு நிமிடங்களில் முடிந்தது. மேலும் ஐஆர்சிடிசி கணக்கை லாக்-இன் கூட செய்ய முடியாததால் பலரும் அவதிக்குள்ளாகினர்.
ரயில் டிக்கெட் முன்பதிவு வழக்கமாக 60 நாள்களுக்கு முன்பு தொடங்கும். அந்த வகையில் தீபாவளிக்கு ரயில்களில் பயணிப்பதற்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. நடப்பாண்டில் வரும் நவ. 8-ஆம் தேதி (ஞாயிறு) தீபாவளி திருநாள் கொண்டாடப்படுகிறது.
அதன்படி, தீபாவளிக்கு சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்வோர் அதிக அளவில் ரயில்களில் முன்பதிவு செய்து வருகின்றனர். சொந்த ஊர் செல்வதற்கான டிக்கெட் முன்பதிவு முடிந்த நிலையில், சொந்த ஊரில் இருந்து நகரங்களுக்குத் திரும்புவதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.
தீபாவளிக்கு மறுநாள் நவ. 9 ஆம் தேதி (திங்கள்கிழமை) பயணிப்பதற்கு ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (செப். 10) காலை 8 மணிக்குத் தொடங்கியது. தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் முடிந்தன. தீபாவளி மறுநாள் என்பதால் டிக்கெட் முன்பதிவில் கடும் போட்டி நிலவியது.
பலருக்கும் ஐஆர்சிடிசி லாக் - இன் கணக்கே உள்நுழைய முடியாத நிலை இருந்ததாகக் கூறுகின்றனர். 'சுமார் 5 நிமிடங்களுக்கு பிறகே கணக்கில் உள்நுழைய முடிந்தது என்றும் ஆனால் அப்போது டிக்கெட்டுகள் எதுவும் இல்லாமல் 'REGRET' நிலையில் இருந்தது' என்றும் கூறுகிறார்கள். அதேபோல ஒரு சிலருக்கு சுமார் 30-40 நிமிடங்களாக ஐஆர்சிடிசி லாக்- இன் ஆகவில்லை என்றும் புகார் தெரிவிக்கின்றனர்.
சிலருக்கு உள்நுழைந்தாலும் டிக்கெட் கட்டணம் செலுத்தும் பணப்பரிமாற்றத்தில் பிரச்னை ஏற்பட்டு டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் போனது. டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாததால் பயணிகள் இன்று கடும் அதிருப்தியும் ஏமாற்றமும் அடைந்தனர்.
ஏசி டிக்கெட்டுகளும் சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்ததால் பயணிகள் கடும் ஏமாற்றமடைந்துள்ளனர். பொதுவாக அனைத்து விழாக் காலங்களிலும் டிக்கெட் முன்பதிவு நிலை இப்படித்தான் இருக்கிறது.
சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து மற்ற பகுதிகளுக்கு குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு பயணிப்பவர்கள் எண்ணிக்கை, முன்பதிவு டிக்கெட்டுகளின் எண்ணிக்கையைவிட பல மடங்கு அதிகமாக இருப்பதால் ரயில் டிக்கெட் கிடைக்காமல் பலரும் அவதிப்படுகின்றனர். அதேபோல இணைத்தளத்தில் இதுபோன்ற பிரச்னைகள் காரணமாகவும் டிக்கெட் கிடைப்பதில்லை.
நவ. 10, செவ்வாய்க்கிழமை பயணிப்பதற்கு நாளை (செப். 11, வெள்ளி) காலை 8 மணிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Train ticket booking for the day after Diwali: Passengers deeply dissatisfied for login issue
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

