Politics
நெல்லை: "முதல்வர் விஜய் முதலீடுகளை ஈர்க்கத்தான் லண்டன் சென்றாரா?" - நயினார் நாகேந்திரன் கேள்வி
முதல்வர் முதலீடுகளை ஈர்க்கத்தான் லண்டன் சென்றாரா என்பதில் வெளிப்படை தன்மை வேண்டும் சொல்கிறார் நயினார் நாகேந்திரன். | Nainar Nagendran states that there must be transparency regarding whether the Chief Minister actually went to London to attract investments.

”முதல்வர் விஜய் லண்டனுக்குச் சொந்த வேலையாகச் சென்றுள்ளாரா? அவருடன் யார் யாரெல்லாம் சென்றுள்ளார்கள் என்பதும் தெளிவில்லை. உண்மையிலேயே முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காகத்தான் அவர் சென்றுள்ளாரா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது” - நயினார் நாகேந்திரன்
நெல்லை பா.ஜ.க அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “இன்றைய சூழலில் 2 இடைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. 4 இடைத்தேர்தல்கள் வரவுள்ளன. சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்த 3 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் வருகிறது என்றுச் சொன்னால், அதற்கு காரணம் குதிரை பேரம் நடந்துள்ளது என எல்லோரும் கூறுகிறார்கள்.
இந்தக் குதிரைபேரம் எதற்காக என்பது உங்களுக்கே தெரியும். தமிழக முதலமைச்சர் விஜய் தற்போது லண்டன் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அவர் சொந்த வேலையாகச் சென்றுள்ளாரா அல்லது யாருடன் சென்றுள்ளார் என்பது தெரியவில்லை. அரசு செலவில் அவருடன் யார் யாரெல்லாம் சென்றுள்ளார்கள் என்பதும் தெளிவில்லை. உண்மையிலேயே முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காகத்தான் அவர் சென்றுள்ளாரா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. தொழில்துறை அமைச்சர் உடன் அழைத்துச் செல்லப்பட்டாரா?வெறும் 3 நாட்களில் எத்தனை முதலீட்டாளர்களைச் சந்தித்து விட முடியும்?
எத்தனை கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்துள்ளார்? என்பதும் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. சொந்த வேலையாகச் சென்றிருந்தால் யாரும் ஒன்றும் சொல்லப்போவதில்லை. ஆனால், தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்கத்தான் சென்றுள்ளார் என்றால், தமிழகம் திரும்பியதும் முதலீடுகள் குறித்து விரிவாக விளக்க வேண்டும். அவரது பயணம் தவறில்லை, ஆனால் வெளிப்படைத்தன்மை அவசியம்.
தமிழக சட்டப்பேரவை நடவடிக்கைகளை வேடிக்கையாகவும் விந்தையாகவும் பொதுமக்கள் பார்க்கின்றனர். சட்டமன்றத்தில் ஒவ்வொருவரும் தங்களின் குடும்பத்தைப் பற்றி மட்டுமே பேசி வருகிறார்கள். பைபிள் வசனங்கள், உறவினர்களைப் பற்றிப் பேசுவது சட்டமன்றத்திற்கு ஏற்புடையதா என்பதைப் பொதுமக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்” என்றார்.
