Religion
பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவி வழிபட ஹிந்து அமைப்புகளுக்கு அறிவுரை

சென்னை:பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவி வழிபட ஹிந்து அமைப்புகளுக்கு, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
இதில், கூடுதல் கமிஷனர்கள் கபில் குமார் சரட்கர், நரேந்திர நாயர் உள்ளிட்ட அதிகாரிகளும், ஹிந்து முன்னணி, ஹிந்து மக்கள் கட்சி, பா.ஜ., பாரத் ஹிந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த, 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கலந்தாய்வில் விநாயகர் சிலைகளை நிறுவி வழிபாடு செய்வதற்காக வழங்கப்பட்ட அறிவுரைகள்:
* விநாயகர் சிலைகள் நிறுவுமிடத்தின் நில உரிமையாளர்கள், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத்துறை அல்லது அரசு துறையிடமிருந்து அனுமதி பெற்றிருக்க வேண்டும்
* சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரியிடம், விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கான படிவங்களை பூர்த்தி செய்து, அதில் குறிப்பிட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளை கடைபிடிக்க உறுதியளித்து, அனுமதி பெற்றிருக்க வேண்டும்
* விநாயகர் சிலைகளை கரைக்க காவல் துறை அனுமதிக்கப்பட்ட நாட்களில், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை நான்கு சக்கர வாகனங்களில் எடுத்துச் சென்று, அமைதியான முறையில் கரைக்க வேண்டும்
* சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படியும், தமிழக அரசின் உத்தரவுப்படியும், விதிகளை பின்பற்றி, போலீசார் அனுமதிக்கும் நாட்களில், விநாயகர் சிலைகளை அமைதியான முறையில் ஊர்வலமாக எடுத்துச் சென்று, நீரில் கரைக்க வேண்டும்.
இவ்வாறு கலந்தாய்வு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
