Sport
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி ஆதவ் அர்ஜுனா தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 2026 - 27-ம் ஆண்டுக்கான முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது.
போட்டிக்கான சின்னம், கொடி மற்றும் வீரர்களின் உடையை அறிமுகப்படுத்தி, மகளிர் கால்பந்து போட்டியை, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடங்கி வைத்தார்.
அனைத்து மாவட்டங்களிலும் நேற்று தொடங்கிய இந்த போட்டிகள், அக்டோபர் 4 வரை நடக்க உள்ளன.
இதில் பள்ளி, கல்லுாரி மாணவ - -மாணவியர், பொது மக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என, 5 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இப்போட்டிகளில் பங்கேற்க, இந்த ஆண்டு 26 லட்சத்து, 38,267 பேர் இணையதளம் வாயிலாக பதிவு செய்து, புதிய சாதனை படைத்துள்ளனர். கடந்த ஆண்டைவிட, 10 லட்சத்திற்கும் அதிகமானோர் கூடுதலாக பதிவு செய்துள்ளனர்.
இதில், 14.86 லட்சம் பள்ளி மாணவர்கள், 5.35 லட்சம் கல்லுாரி மாணவர்கள், 5.07 லட்சம் பொது மக்கள், 69,890 அரசு ஊழியர்கள் மற்றும் 38,058 மாற்றுத்திறனாளிகள் இடம்பெற்றுள்ளனர். மொத்தம் 1 லட்சத்து, 9,633 பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.
விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், ''மாணவர்கள் கல்விக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை, விளையாட்டிற்கும் அளிக்க வேண்டும். ஒரு நாட்டிற்கு பெருமை சேர்ப்பது விளையாட்டுத் துறைதான். விளையாட்டு எந்த நாட்டில் சிறந்திருக்கிறதோ, அந்த நாடும் சிறந்திருக்கும்,'' என்றார்.
இந்த விழாவில், ஜப்பானில் நடக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் தமிழகத்தின் 36 வீரர் - வீராங்கனையருக்கு, 2.52 கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
அத்துடன், ஸ்குவாஷ் வீரர்கள் ஜோஷ்னா சின்னப்பா, வேலவன் செந்தில்குமார், ஷமினா ரியாஸ் ஆகியோருக்கு தலா 7 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளும் வழங்கப்பட்டன.



/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

