Arts, culture, entertainment and media
ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்கு உரிமை கோரி வழக்கு.. உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

நடிகை ஸ்ரீதேவியின் சென்னை கிழக்கு கடற்கரை சாலை சொத்துக்கு உரிமை கோரி தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றம் சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரை மத்தியஸ்தராக நியமித்துள்ளது. பல ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த சொத்து பிரச்னையின் முழுமையான பின்னணி என்ன?
மறைந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த 1988-ஆம் ஆண்டு, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் 2.7 ஏக்கர் நிலத்தை சம்பந்த முதலியார் குடும்பத்தினரிடம் இருந்து வாங்கியுள்ளார். கடந்த 37 ஆண்டுகளாக இந்த சொத்தை ஸ்ரீதேவியின் குடும்பத்தினர் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில், சம்பந்த முதலியாரின் மகன் சந்திரசேகரனின் வாரிசுகளான நடராஜன் மற்றும் சிவகாமி ஆகியோர், அந்த நிலத்தில் தங்களுக்கு உரிமை இருப்பதாகக் கூறி செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் மற்றும் மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். ஆனால், முழுமையான விசாரணைக்குப் பிறகே சொத்தின் உரிமை குறித்து முடிவு செய்ய முடியும் எனக் கூறி அந்த மனுவை செங்கல்பட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து போனி கபூர் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது.
1988-ஆம் ஆண்டு சட்டப்படி நிலம் வாங்கப்பட்ட நிலையில், 37 ஆண்டுகளுக்குப் பிறகு உரிமை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், போலி வாரிசு சான்றிதழ் மூலம் சொத்தை அபகரிக்க முயற்சி நடப்பதாகவும் அவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கை நிராகரித்து உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து சிவகாமி மற்றும் நடராஜன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். நீதிபதிகள் கே.வி.விஸ்வநாதன் மற்றும் அருண் பள்ளி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜூ ராமசந்திரன், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சொத்தில் ஐந்தில் ஒரு பங்கு, மனுதாரர்களின் தந்தையான சந்திரசேகருக்கு சொந்தமானது என்றும், அவருக்குத் தெரியாமல் உறவினர்கள் அந்த நிலத்தை முறைகேடாக விற்பனை செய்ததாகவும் வாதிட்டார்.
இதற்கு பதிலளித்த போனி கபூர் தரப்பு வழக்கறிஞர்கள், 1988-ஆம் ஆண்டு நிலம் வாங்கப்பட்ட நிலையில், 2025-ஆம் ஆண்டில்தான் உரிமை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினர். மேலும், சந்திரசேகர் உயிருடன் இருந்த காலத்திலும் இந்த சொத்து தொடர்பாக எந்த வழக்கும் தொடரப்படவில்லை எனத் தெரிவித்தனர். பழைய சர்வே எண்ணை அடிப்படையாகக் கொண்டு மனுதாரர்கள் உரிமை கோருவதாகவும், தற்போது அந்த நிலம் பாகப்பிரிவினை செய்யப்பட்டு புதிய சர்வே எண்களாக மாறிவிட்டதாகவும் போனி கபூர் தரப்பில் வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் ஏன் சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணக்கூடாது என கேள்வி எழுப்பினர். சொத்து உரிமை தொடர்பான பிரச்னையை இரு தரப்பினரும் அமர்ந்து பேசி முடிவுக்கு கொண்டு வரலாம் என்றும் அறிவுறுத்தினர். ஆனால், மனுதாரர்களுக்கு சொத்தில் உரிமையே இல்லை எனக் கூறும் நிலையில், எதற்காக சமரசத்திற்கு செல்ல வேண்டும் என போனி கபூர் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.
இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே மத்தியஸ்தம் செய்வதற்காக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரை நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சமரச தீர்வு ஏற்படாத பட்சத்தில், போனி கபூர், ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு மீதான அடுத்த விசாரணை டிசம்பர் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நீடித்து வரும் ஸ்ரீதேவியின் சென்னை சொத்து உரிமை விவகாரம், தற்போது நீதிமன்றத்தின் மத்தியஸ்த முயற்சியால் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.
