Economy, business and finance
மருத்துவக் கொள்ளையை அம்பலமாக்கும் துக்காராம் முண்டே- மகாராஷ்டிராவிலும் ஒரு 'சகாயம்'

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் உள்நோயாளி பிரிவில் உள்ள நோயாளிகளிடம் அத்தியாவசிய மருத்துவக் கருவிகளுக்கு அப்பட்டமாக அரங்கேறும் மிக மோசமான விலைக் கொள்ளையை மகாராஷ்டிர மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது.
மாநில விலை கண்காணிப்பு ஆதாரப் பிரிவு நடத்திய விரிவான சந்தை ஆய்வில், மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் அவசியமான உபகரணங்கள் அவற்றின் அசல் கொள்முதல் விலையை விடப் பல மடங்கு கூடுதல் விலைக்கு நோயாளிகளுக்கு விற்கப்படுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த அநியாய விலையேற்றத்தை முற்றிலும் நியாயமற்றது என்று சாடியுள்ள மகாராஷ்டிர எஃப்டிஏ கமிஷனர் துக்காராம் முண்டே, இதில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்த ஆய்வறிக்கை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் மற்றும் தரவுகள் நடுத்தர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. ஒரு நோயாளிக்கு குளுக்கோஸ் போன்ற திரவங்களைச் செலுத்தப் பயன்படும் 'மெடிபியூஷன் ஐவி செட்' ஒன்றின் அசல் கொள்முதல் விலை வெறும் 11 ரூபாய் 5 காசுகள் மட்டுமே ஆகும். ஆனால், அது மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு 325 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது 2,841 சதவீதம் என்ற அசுரத்தனமான லாப வரம்பைக் குறிக்கிறது. இதேபோல், லைவோபியூஷன் நிறுவனத்தின் ஐவி செட்களும் 2,091 சதவீத கூடுதல் லாபத்திற்கு விற்கப்படுகின்றன.
நோயாளிகளுக்கு அவசரமாகத் தேவைப்படும் 10 மில்லி சிரிஞ்ச் ஒன்றின் அசல் விலை 6 ரூபாய் 75 காசுகள் ஆகும். ஆனால் அது சில்லறை சந்தையில் 57 ரூபாய் 20 காசுகளுக்கு விற்கப்படுகிறது, இது 747 சதவீத விலை உயர்வாகும். நோயாளிகளுக்கு நரம்பு வழியாக மருந்துகளைச் செலுத்தப் பயன்படுத்தப்படும் ஐவி கேனுலா ஒன்றின் கொள்முதல் விலை 22 ரூபாய் 50 காசுகள் ஆகும், ஆனால் அது நோயாளிகளின் பில்லில் 424 ரூபாயாகக் கணக்கிடப்படுகிறது. இது அதன் உண்மையான விலையை விட 19 மடங்கு அதிகமாகும்.
அதேபோல, சுவாசப் பிரச்சனை உள்ளவர்களுக்குப் பயன்படும் 40 ரூபாய் மதிப்புள்ள நெபுலைசர் ஆக்ஸிஜன் மாஸ்க் 715 ரூபாய்க்கும், விஞ்சோ ஹெல்த்கேர் நிறுவனத்தின் 45 ரூபாய் மதிப்புள்ள மாஸ்க் கிட் 652 ரூபாய்க்கும் நோயாளிகளுக்கு விற்கப்படுகிறது. இது 1,687 சதவீத லாப வரம்பாகும். இதுதவிர, ரிப்பெல் நிறுவனத்தின் 29 ரூபாய் 41 காசுகள் கொண்ட கதீட்டர் மருத்துவக் கருவி, அதன் கொள்முதல் விலையை விட 10 மடங்கு கூடுதல் விலைக்கு விற்கப்பட்டு வருவதும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தக் கொள்ளையைத் தடுத்து நிறுத்தக் கோரி, மத்திய மருந்துத் துறைச் செயலாளருக்குத் துக்காராம் முண்டே அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தங்களின் உற்பத்திச் செலவு, விளம்பரம், விநியோகம் மற்றும் லாபம் ஆகிய அனைத்தையும் சேர்த்தே அசல் கொள்முதல் விலையை நிர்ணயிக்கின்றன. ஆனால், மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருக்கும் உள்நோயாளிகளுக்கு இந்தச் சிகிச்சைப் பொருட்கள் இன்றியமையாதவை என்பதால், அவர்களிடம் விலையை எதிர்த்துக் கேட்கும் பேரம் பேசும் சக்தி பூஜ்ஜியமாகவே உள்ளது.
இதனைப் பயன்படுத்திக் கொண்டு சில்லறை வர்த்தக மட்டத்தில் நடக்கும் இந்த அநியாயக் பகல் கொள்ளையைத் தடுக்க, இந்தச் சாதாரண மருத்துவப் பொருட்களை உடனடியாக 2013-ஆம் ஆண்டின் மருந்துகள் விலை கட்டுப்பாட்டு ஆணையின்கீழ் கொண்டு வந்து, அவற்றுக்குச் சட்டப்பூர்வ உச்சவரம்பு விலை நிர்ணயிக்க வேண்டும் என்றும் அவர் தனது கடிதத்தில் கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)


