ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்ட்டை புறக்கணிக்கும் விருதுநகர் கோட்ட அரசு பஸ்கள்: அலட்சியத்தில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள்
ஸ்ரீவில்லிபுத்துார்:நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை கோட்ட அரசு போக்குவரத்து கழகத்தை தொடர்ந்து விருதுநகர் கோட்ட அரசு பஸ்களும் இரவு நேரங்களில் கூட ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்வதில்லை. இதை வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்துாரில் நகர் மற்றும் கிராமங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் விருதுநகர், அருப்புக்கோட்டை, மதுரை, தேனி, திருச்சி, கோவை, திருப்பூர், ஈரோடு, நாகர்கோயில், செங்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூர் நகரங்களுக்கு பயணித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் கோட்ட அரசு பஸ்களே அதிகளவில் இயங்கி வருகிறது. இவைகளில் பெரும்பாலான பஸ்கள் ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்வதில்லை. பகல் நேரத்தில் கூட போக்குவரத்து நெருக்கடி இருக்கும் என்பதால் மக்கள் அதனை ஏற்றுக்கொண்டு சர்ச் சந்திப்பில் இறங்கி தங்கள் வீடுகளுக்கு செல்கின்றனர்.




