Lifestyle and human interest
டிப்போக்கள் இருந்தும் நேரடி பஸ்களை இயக்காததால் மக்கள் நின்று கொண்டே பயணம்

ஸ்ரீவில்லிபுத்துார்- விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்துார், சாத்துார், காரியாபட்டி நகரங்களில் அரசு போக்குவரத்து கழக டிப்போக்கள் இருந்தும் அங்கிருந்து புறப்படும் வகையில் நேரடி பஸ்கள் இயக்கப்படாததால், தொலைதுாரத்தில் இருந்து வரும் பஸ்களில் நின்று கொண்டும், படிகளில் தொங்கிக் கொண்டும் பயணிக்க வேண்டிய சிரமத்திற்கு மக்கள் தினமும் ஆளாகி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையத்தில் 2, ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, சிவகாசி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி என 9 அரசு போக்குவரத்து கழக டிப்போக்கள் உள்ளது.
இங்குள்ள டவுன் பஸ்கள் மூலம் மாவட்டத்தின் அனைத்து கிராமங்களுக்கும், ரூட் பஸ்கள் மூலம் பல்வேறு வெளிமாவட்டங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
பல ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒவ்வொரு ஊரிலும் குறைந்த அளவு மக்கள் வசித்த நிலையில் முக்கிய நிகழ்வுகள், விடுமுறை நாட்கள், சுப நாட்களில் மட்டுமே மக்கள் வெளியூருக்கு பயணித்து வந்தனர்.
ஆனால் இன்றைய உலகில் ஒவ்வொரு நகரிலும் மக்கள் தொகை அதிகரித்து தினமும் ஏராளமானோர் தொழில், கல்வி, வேலை வாய்ப்புக்காக வெளி மாவட்டங்களுக்கு அதிகளவில் சென்று வருகின்றனர். ஆனால் அவர்களின் தேவைக்கு ஏற்ப போதிய அளவிற்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.
இதனால் அதிகாலை 5:00 மணி முதல் காலை 11:00 மணி வரை பஸ்களில் இரு மடங்கு பயணிகள் நின்று கொண்டும், படிகளில் தொங்கிக்கொண்டு பயணிக்கின்றனர்.
மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் அரசு பஸ் டிப்போக்கள் இருந்தும், அங்கிருந்து புறப்படும் வகையில் பஸ்கள் இயக்கப்படவில்லை. இது வழித்தட நகர மக் களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அரசு பஸ்கள் ராஜபாளையம் சென்று அங்கிருந்து மதுரை, திருச்சி, ராமநாதபுரம் புறப்பட்டு செல்கிறது.
ஆனால், ராஜபாளையத்திலேயே சீட்டுகள் நிரம்பி விடுவதால் ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன் கோவில், நத்தம்பட்டி, அழகாபுரி மக்கள் படிகளில் தொங்கிக்கொண்டு தான் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.
இதுபோல் சாத் தூரில் உள்ள அரசு பஸ்கள் கோவில்பட்டி சென்று அங்கிருந்து தான் மதுரை, திருச்சி, கோவைக்கு செல்கிறது. இதனால் சாத்தூர், சூலக்கரை, விருதுநகர் பகுதி மக்கள் நின்று கொண்டே பயணிக் கின்றனர்.
இதேபோல் அருப்புக்கோட்டையில் இருந்து புறப்பட்டு வரும் பஸ்களை நம்பித்தான் கல் குறிச்சி, காரியாபட்டி மக்கள் மதுரைக்கு பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.
ஆனால் அருப்புக்கோட்டையிலேயே அனைத்து சீட்டுகளும் நிரம்பி விடுவதால் இப் பகுதி மக்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர். மேலும் கல்குறிச்சி, காரியாபட்டிக்கு பயணிகளை ஏற்ற மறுக்கின்றனர்.
இதனால் தங்கள் சொந்த ஊரில் அரசு பஸ் டிப்போக்கள் இருந்தும் அங்கிருந்து புறப்படும் வகையில் பஸ்கள் இயக்கப்படாததால் தினமும் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து 20 நிமிடத்திற்கு ஒரு முறை மதுரைக்கும், ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை தேனி, விருதுநகருக்கும், இரவு 8:00 மணிக்கு சென்னைக்கும், இரவு 10:00 மணிக்கு கோவை, திருப்பூருக்கும், நேரடி பஸ்களை இயக்க வேண்டும்.
இதேபோல்தான் சாத்தூர் ,காரியாபட்டியில் இருந்தும் அப்பகுதி மக்கள் பயனடையும் வகையில் சுற்றியுள்ள மாவட்ட நகரங்களுக்கு போதிய அளவிற்கு நேரடி பஸ்கள் இயக்க வேண்டும்.
இதற்கு அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க தொகுதி எம்.எல்.ஏ.க் கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக் களின் எதிர்பார்ப்பாகும்.