கோயிலை வைத்து அரசியல் செய்யும் கூட்டம்; அமைச்சர் ரமேஷ் ஆவேச பேட்டி
சென்னை: கோயிலை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்றே ஒரு கூட்டம் இருக்கிறது. அந்த கும்பல் கோயிலை வைத்து மட்டும்தான் அரசியல் செய்ய முடியும் என அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் அமைச்சர் ரமேஷ் கூறியதாவது: கார்த்திகை தீபம் பிரச்னை இல்லைங்க; கொண்டாட்டம். கார்த்திகை தீபத்தை எப்போதும் போல மக்களோடு சேர்ந்து மகிழ்ச்சியாக கொண்டாடுவோம். திருப்பரங்குன்றம் தீப வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வரட்டும். அதன்பிறகு பாருங்கள். கோயில்களில் செல்போன் அனுமதி இல்லை; இந்தத் திட்டம் தோல்வியடையவில்லை. இதை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்று ஒரு கும்பல் இருக்கிறது.
கோயில்களில் நல்லது செய்தாலும் எதிர்க்கிற ஒரு கும்பல் இருக்கிறது. கோயிலை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்றே ஒரு கூட்டம் இருக்கிறது. அந்த கும்பல் கோயிலை வைத்து மட்டும்தான் அரசியல் செய்ய முடியும். அப்படி செய்தாலும் அவர்களை தமிழக மக்கள் மதிக்கப் போவதில்லை. அதனால் அது மிகப் பெரிய விஷயம் கிடையாது, நாங்கள் தெளிவாக இருக்கிறோம். ஏற்கனவே கோயில்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம். மக்களுக்கு ஏதும் பாதிப்பு வந்தால், சிரமம் ஏற்பட்டால் கோயில்களே அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறோம்.


