50 வருஷமாக தீராத மலைக்கிராம மக்களின் கண்ணீர்...
பல தலைமுறையா இங்கேதான் வசிக்கிறோம். தினை, கிழங்கு பயிர் பண்ணுறோம்; காட்டுல கிடைக்கிற தேனையும் உணவா பயன்படுத்துறோம்
முறையிட்ட ஜூ.வி; களத்துக்கு வந்த அமைச்சர்!
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர்ந்த வனப்பகுதிக்குள், தலைமுறை தலைமுறையாக வாழ்ந்துவருகிறார்கள் காணி இன மக்கள். காலங்கள் மாறிவிட்டன, ஆட்சிகள் மாறிவிட்டன. ஆனால், இவர்களின் வாழ்க்கையில் மட்டும் பெரிய மாற்றம் இல்லை. இன்றும் அடிப்படை வசதிகளுக்காக ஏங்கித் தவிக்கிறார்கள். `‘எங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்குக் கூடுதல் கட்டடங்கள் வேண்டும்... எங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு, திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்... எனக் கடந்த 50 ஆண்டுகளாக அரசிடம் கோரிக்கை வைத்துவருகிறோம். ஆனால், அரசு கண்டுகொள்ளவில்லை. நீங்களாவது எங்களின் கோரிக்கைகளைக் கேளுங்கள்...” என்று, தங்கள் ஆதங்கத்தை நமது அலுவலகத்துக்குக் கடிதமாக அனுப்பியிருந்தார்கள் காணி மக்கள்.
அந்த மக்களின் குறைகளை சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசுவின் கவனத்துக்கு எடுத்துச் சென்றோம். கவனமாகக் கேட்ட அவர், “உடனடியாக நானே நேரில் வந்து அந்த மக்களைச் சந்தித்துப் பேசுகிறேன்” என்றார். இதற்காக, கடந்த 12-ம் தேதி காலை 8 மணிக்கு சின்ன மைலாறு, பெரிய மைலாறு, காணிக் குடியிருப்பு, அங்குள்ள பள்ளிக்கூடம் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்றார். அவருடன், நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன், பழங்குடியினர் நல இயக்குநர் அண்ணாதுரை, வனத்துறை அதிகாரிகளும் சென்றனர்.



