Politics
"தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே!” - நிர்மல் குமார்
“ஆபாச நாடகம்” என திமுக போராட்டத்தை விமர்சித்த நிர்மல் குமார், அரசியல் மோதல் குறித்து ஸ்டாலினுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்|Nirmal Kumar condemned alleged offensive remarks by DMK leaders during protests against Vijay’s Assembly remarks on Stalin’s MISA arrest.

திமுக போராட்டத்தில் விஜய், நிர்மல் குமார் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சுகள் எழுந்த நிலையில், அமைச்சர் நிர்மல் குமார் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார்.
மிசா சட்டத்தின் கீழ் கைதான திமுக தலைவர் ஸ்டாலினை அவதூறாக பேசியதாக, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாரை எதிர்த்துத் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது விஜய் மற்றும் நிர்மல் குமார் குறித்தும், பெண்கள் குறித்தும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் சேகர்பாபு பேசியிருந்தனர்.
இந்தப் பேச்சிற்கு எதிர்ப்புத் தெரிவித்து நிர்மல் குமார் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
“மேடைபோட்டு என்னைப் பற்றியும் எங்கள் தலைவர் குறித்தும் ஆபாசமாகப் பேச வைப்பதுதான் உங்களின் கடைசி ஆயுதமா ஸ்டாலின்?
நேற்று ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் உங்கள் கட்சியினர் நடத்திய ஆபாச நாடகம் தமிழக மக்கள் குறிப்பாகப் பெண்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது என்பதை எப்போது உணர்வீர்கள் ஸ்டாலின்?
எப்போதெல்லாம் திமுகவை நோக்கி ஊழல், துரோகம், உங்களின் பொய்கள் பற்றிக் கேள்வி எழுகிறதோ அன்று திமுக எடுக்கும் ஆயுதம் வன்முறை அல்லது ஆபாசப் பேச்சு. தரமற்ற திமுகவினரின் பேச்சுக்களை அவர்களின் இல்லத்தில் உள்ள பெண்கள், குழந்தைகளிடம் காட்ட முடிகிறதா ஸ்டாலின்?
திமுகவால் அரசியலை விட்டு ஒதுங்கிய மக்கள் இன்று தளபதியால் மீண்டும் அரசியலில் அடியெடுத்து வைத்துள்ளனர். அரசியலில் ஒவ்வொரு அசைவும் மக்களால் தணிக்கை செய்யப்படுகிறது என்பதை உணர்கிறீர்களா ஸ்டாலின்?
குழந்தைகள், பெண்களின் முகமாக இருக்கும் தளபதியின் தவெகவை எதிர்கொள்ளத் திராணி இல்லாமல் தெருவில் இறங்கித் திமுகவினர் செய்யும் அட்டூழியங்களை என்றும் நேர்மையாக மட்டுமே எதிர்கொள்வோம்.
நீங்கள் திருந்துவதற்கு வாய்ப்பில்லை, அதேநேரம் தமிழக அரசியலில் இருந்து திமுகவின் முடிவுரையை விரைவில் மக்கள் எழுதுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.
புரட்சித் தலைவர் கூறியதைத்தான் மீண்டும் … மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன் “தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே!”
