Economy, business and finance
சென்னையில் ரூ.1,020 கோடிக்கு நிலம் வாங்கிய ஐ.டி., நிறுவனம்: உலகளாவிய திறன் மையம் அமைப்பதாக தகவல்

சென்னை: சென்னை -- பல்லாவரம் - துரைப்பாக்கத்தை இணைக்கும் ரேடியல் சாலையில், 12 ஏக்கர் நிலத்தை 1,020 கோடி ரூபாய்க்கு கே.எல்.ஏ., கார்ப்பரேஷன் என்ற ஐ.டி., நிறுவனம் வாங்கியுள்ளது. இங்கு ஜி.சி.சி., எனப்படும் உலகளாவிய திறன் அமைக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:
அமெரிக்காவை சேர்ந்த கே.எல்.ஏ., நிறுவனம், சென்னையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் மற்றும் புத்தாக்க மையத்தை அமைக்க தமிழக அரசுடன் ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்காக 3,510 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என அறிவித்திருந்தது. கே.எல்.ஏ., நிறுவனம் 1,020 கோடி ரூபாய்க்கு நிலம் வாங்கியிருப்பது ரேடியல் சாலை பகுதியில் இதுவரை நடந்துள்ள மிகப்பெரிய நில விற்பனையாக கருதப்படுகிறது.
ஹைதராபாதை சேர்ந்த தனிநபரிடம் இருந்து இந்த நிலம் வாங்கப்பட்டுள்ளதாகவும், இங்கு நிறுவனத்தின் உலகளாவிய திறன் மையம் அமைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்லாவரம் - - துரைப்பாக்கம் ரேடியல் சாலையை ஒட்டி ஜி.சி.சி., காரிடார் உருவாக்கப்படும் என தமிழக அரசு சமீபத்தில் அறிவித் துள்ளது.
இப்பகுதியில் ஏற்கனவே பல ஐ.டி., நிறுவனங்களின் கட்டமைப்புகள் உள்ளன. இதனால் இப்பகுதியில் வர்த்தக மற்றும் அலுவலக கட்டடங்களுக்கான நிலத்தின் மதிப்பு மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளன.