Politics
“கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” - அமைச்சர் நிர்மல்குமார்!

த.வெ.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் 2வது ஆலோசனைக் கூட்டம் இன்று (09.09.2026) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. இதனையொட்டி விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களை தவெக அமைச்சர்கள் சந்தித்து அதிகாரப்பூர்வ அழைப்பை நேரில் வழங்கினர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், த.வெ.க தலைமையில் கூட்டணி அமைப்பது, கூட்டணிக்கு அதிகாரப்பூர்வமாகப் பெயர் சூட்டுவது, கூட்டணிக்கான ஒருங்கிணைப்பாளரை முறைப்படி நியமிப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தல் வியூகங்கள் மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், தவெக தோழமை கட்சிகள் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. அதே போல், தவெக கூட்டத்தில் பங்கேற்பது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், நேற்று மாலை சென்னை மண்ணடியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை அலுவலகத்திற்கு அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் வருகைத் தந்து தவெக ஆதரவு கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீனை சந்தித்து அழைப்பு விடுத்தார். அதனை தொடர்ந்து அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், “இப்போதைக்கு எம்.எல்.ஏக்கள் இருக்கிற கட்சிகளுக்கு எல்லாம்அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், விசிக ஆகிய கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பார்கள். கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆலோசனை செய்து வருகிறது. இந்த கூட்டம் முடிந்த பிறகு எல்லா தலைவர்களுடன் முதல்வர் ஆலோசனை செய்து அடுத்த கட்டத்துக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வார். கம்யூனிஸ்ட் கட்சிகளை பொறுத்தவரை அவர்களுடைய மாநிலக் குழு, தேசியக் குழு எல்லாம் ஆலோசனை செய்து தான் முடிவை சொல்வார்கள். இது வழக்கமான ஒன்று தான். அதையெல்லாம் ஆலோசனை செய்து குறைந்தபட்சத் திட்டம் போட்டு அதன் பிறகு சொல்கிறோம் என்று சொல்லிருக்கிறார்கள்.
நாங்களும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஏனென்றால் எங்களுடைய இக்கட்டான காலகட்டத்தில் எங்களுக்கு துணை நின்றவர்கள். அவர்களுடன் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய விருப்பம். கண்டிப்பாக நல்லபடியாக முடியும் என்று நம்புகிறோம்” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)




