Arts, culture, entertainment and media
வரலாற்றில் முதல்முறை: `தேசிய திரைப்பட விருது விழா' - டெல்லியில் இருந்து குஜராத்திற்கு மாற்றம்?
தேசிய திரைப்பட விருது விழா குஜராத்தில் நடைபெறவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
திரைப்படங்களுக்கான நாட்டின் மிக உயரிய விருது, `தேசிய திரைப்பட விருது'. 2024-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான 72-வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த ஜூலை மாதம் டெல்லியில் அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை 'ஆர்டிகிள் 370' கைப்பற்றியது. 'சந்து சாம்பியன்' படத்தில் நடித்த கார்த்திக் ஆர்யன் மற்றும் 'பிரமயுகம்' படத்தில் நடித்த மம்மூட்டி ஆகியோர் சிறந்த நடிகருக்கான விருதைப் பகிர்ந்துகொண்டனர்.
'ஆர்டிகிள் 370' படத்திற்காக யாமி கௌதம் சிறந்த நடிகையாகத் தேர்வு செய்யப்பட்டார். மேலும், 'ஸ்டேச்சூ ஆஃப் யூனிட்டி – ஏக்தா கா பிரதீக்' என்ற ஆவணப்படத்திற்காகச் சிறந்த இயக்குநருக்கான விருதை ஆனந்த் எல். ராய் வென்றார்.
இந்த விருது வழங்கும் விழா கடந்த 71 ஆண்டுகளாக டெல்லியில் நடந்து வந்தது. இந்தியக் குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்கி கௌரவிப்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டுக்கான 72-வது தேசிய திரைப்பட விழா, குஜராத் மாநிலத்தில் உள்ள 'ஒற்றுமையின் சிலை' அமைந்துள்ள ஏக்தா நகரில் நடைபெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இம்மாத இறுதியில் குஜராத்திற்கு பயணம் மேற்கொள்ளும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ஏக்தா நகருக்குச் சென்று அங்கு நடைபெறும் 72-வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் விருதுகளை வழங்குவார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய கலைத்துறையின் மிக முக்கியமான இந்த விழா, நாட்டின் தலைநகரை விட்டு முதன்முறையாக குஜராத்தின் சுற்றுலாத் தலமான ஏக்தா நகரில் நடைபெறவுள்ளது திரைப்பட உலகினரிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.!
