Politics
'அதிகாரிகள் செய்தது தவறு; வருந்துகிறோம்' - தவெக அமைச்சர்கள் சந்திப்பு குறித்து பெ.சண்முகம்
குஜிலியம்பாறை வட்டாட்சியர் மற்றும் தலைமைச் செயலாளர் தொடர்பான விவகாரங்களில் அதிகாரிகள் செய்த தவறு என அமைச்சர்கள் தெரிவித்ததாக சிபிஎம் கூறியுள்ளது|TN ministers met CPM leaders over controversial circulars and said the actions were officials’ mistakes, expressing regret over the incidents.

கம்யூனிஸ்ட் கட்சியினர் குறித்த சர்ச்சை சுற்றறிக்கைகள் தொடர்பாக சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்தை அமைச்சர்கள் சந்தித்து வருத்தம் தெரிவித்தனர்.
கடந்த மாதம், தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக இரண்டு சம்பவங்கள் நடந்தன.
ஒன்று, குஜிலியம்பாறை வட்டாட்சியர் அந்தச் சுற்றுவட்டாரத்தில் உள்ள கம்யூனிஸ்டுகளின் பெயரைச் சேகரிக்கச் சொல்லியிருந்தார்.
இன்னொன்று, தலைமைச் செயலாளர் சாய்குமார் கம்யூனிஸ்ட் இயக்கங்களோடு இணைந்து மாணவர்கள் போராடக் கூடாது என்று கல்லூரிக்குச் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.
இந்த இரண்டு சம்பவங்களுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்வினையாற்றியிருந்தனர்.
தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
சாய்குமாரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அவரது செயல்பாடு குறித்து முதலமைச்சர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பாகக் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிலையில் தவெக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், ராஜ்மோகன் ஆகியோர் தங்களது கூட்டணிக் கட்சித் தலைவர்களையும், தங்களுக்கு ஆதரவளித்த கட்சித் தலைவர்களையும் சந்தித்தனர்.
அப்போது வருகிற 9-ம் தேதி நடக்க உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுத்தனர்.
அப்படி அவர்கள் சந்தித்த கட்சித் தலைவர்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும் அடக்கம்.
இந்தச் சந்திப்பு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது...
“மாண்புமிகு தமிழ்நாடு அமைச்சர்கள் ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் ஆகியோர் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.
தலைமைச் செயலாளர் மற்றும் குஜிலியம்பாறை வட்டாட்சியர் ஆகியோரின் நடவடிக்கை தொடர்பாக அரசின் கவனத்திற்கு வராமல் அதிகாரிகள் செய்த தவறு என்றும், அதற்காக எங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்றும் தெரிவித்தனர்.”
