Politics
ராஜினாமாவை வாபஸ் பெற மனு போட்டது ஏன்? - ரகசியம் உடைக்கிறார் இசக்கி சுப்பையா

என்னுடைய சுய விருப்பத்தோடு, யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல், சுயநினைவோடு சந்தோஷமாகவே தமிழக சபாநாயகரிடம் என் கைப்பட ராஜினாமா கடிதம் எழுதிக்கொடுத்தேன்.
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தது சபாநாயகரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. இந்த நிலையில், ‘என்னுடைய ராஜினாமாவைத் திரும்பப் பெறுகிறேன்’ என்று சபாநாயகருக்குக் கடிதம் கொடுத்திருக்கிறார் அம்பாசமுத்திரம் முன்னாள் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா. நீதிமன்றத்திலும் இதைத் தெரிவித்திருப்பது, அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இந்த நிலையில், இசக்கி சுப்பையாவை நேரில் சந்தித்து, சில கேள்விகளை முன்வைத்தோம்.
“எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து த.வெ.க-வில் இணைந்த பிறகு, மீண்டும் எம்.எல்.ஏ-வாகத் தொடர அனுமதிக்குமாறு சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தது ஏன்?”
``என்னுடைய சுய விருப்பத்தோடு, யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல், சுயநினைவோடு சந்தோஷமாகவே தமிழக சபாநாயகரிடம் என் கைப்பட ராஜினாமா கடிதம் எழுதிக்கொடுத்தேன். அதை சபாநாயகரும் ஏற்றுக்கொண்டார். பிறகு, அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாகத் தேர்தல் ஆணையத்துக்குத் தகவல் கொடுத்தார். ஆணையமும் அதை ஏற்று, அறிவிப்பை வெளியிட்டது. இந்த நிலையில்தான், `ராஜினாமாவை ஏற்கக் கூடாது’ என்று என் நண்பரும் சகோதரருமான அ.தி.மு.க கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஒரு பக்கம் சபாநாயகர் எனது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டிருக்கிறார். மறுபக்கம் நீதிமன்றம் எனது ராஜினாமா வழக்கை விசாரித்துக்கொண்டிருக்கிறது. அந்த வழக்கின் விசாரணை முடிவில் எப்படி வேண்டுமானாலும் தீர்ப்பு வரலாம். அதன் பின்னர், அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரலாம். ஆனால், இடைத்தேர்தல் நடந்துவிடக் கூடாது என்ற கெட்ட நோக்கத்தில் நீதிமன்றத்தில் வாய்தா வாங்கி, விசாரணையை இழுத்தடிக்கிறார்கள். இப்போது வரை எனது ராஜினாமா ஏற்கப்பட்டதா, இல்லையா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. ஏற்கப்படவில்லை என்றால், என்னை எம்.எல்.ஏ-வாகச் செயல்பட அனுமதியுங்கள் என்றுதான் சபாநாயகரிடம் கேட்டிருக்கிறேன். அதையே இந்த வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்திலும் தெரிவித்தேன்.’’
``நீங்கள் ராஜினாமா செய்யாமல் இருந்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காதே...’’
``ராஜினாமா செய்யச் சொல்லி, அ.தி.மு.க-வில் இருக்கும் சிலர்தான் நிர்பந்தப்படுத்தினர். புரட்சித்தலைவரால் தொடங்கப்பட்டு, புரட்சித் தலைவியால் வளர்க்கப்பட்ட கட்சியில் சிலர் சுயநலத்துக்காகச் செயல்பட்டார்கள். நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக, அ.தி.மு.க-வில் இருந்த 25 பேர் வாக்களித்தோம். எதிராக 22 பேர் மட்டுமே இருந்தார்கள். அப்போது சட்டமன்ற கொறடா அறிவிக்கப்படவில்லை. ஆனாலும், ஆதரவாக வாக்களித்தவர்களைத் தகுதிநீக்கம் செய்யுமாறு சபாநாயகருக்குப் பரிந்துரைத்தார்கள். சொந்தக் கட்சியினரைத் தகுதிநீக்கம் செய்ய விரும்பிய சிலரின் நடவடிக்கையும்கூட எனது ராஜினாமா முடிவுக்குக் காரணம்.’’
``உங்களுக்கு அ.தி.மு.க-வில் யார்மீது வருத்தம் இருக்கிறது?’’
``தனிப்பட்ட வகையில் எனக்கு யார்மீதும் வருத்தம் கிடையாது. நான் சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வரவில்லை. சம்பாதித்த பிறகு, மக்கள் சேவையாற்றவே அரசியலுக்கு வந்தேன். அதுவும் புரட்சித்தலைவி அம்மாவால் அரசியலுக்கு அழைத்துவரப்பட்டு அடையாளம் காட்டப்பட்டேன். ஆனால், அங்குள்ள சிலர் கட்சியைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, தேர்தலுக்குப் பின்னர் பல தவறான முடிவுகளை எடுத்தார்கள். அதனால்தான் மாற்றி முடிவெடிக்க வேண்டியதானது’’
``உங்களின் ராஜினாமா முடிவையும், மீண்டும் எம்.எல்.ஏ-வாகத் தொடர விரும்புவதையும் கிண்டல் செய்து அ.தி.மு.க-வினர் போஸ்டர் ஒட்டியிருக்கிறார்களே...’’
``அந்த போஸ்டரை அச்சடித்து ஒட்டியிருப்பவர்கள் என் கூடவே இருந்த சகோதரர்கள்தான். அதனால், அவர்களுக்கு ஏதாவது நன்மை கிடைக்கும் என்றால், அதுவும் எனக்கு சந்தோஷம்தான்.’’
``அ.தி.மு.க-விலிருந்து த.வெ.க-வில் சேர்ந்த பலரையும் அந்தக் கட்சியில் கண்டுகொள்ளாததாலேயே அதிருப்தியில், நீங்கள் ஏதேதோ செய்வதாகச் சொல்கிறார்களே...’’
``த.வெ.க-வில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. எனக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பும், தென்காசி மாவட்ட அமைப்புச் செயலாளர் பொறுப்பும் தந்திருக்கின்றனர். முதல்வர் விஜய்யின் செயல்பாடுகளால் கவரப்பட்டுத்தான் த.வெ.க-வில் இணைந்தேன். மற்றபடி, என்னுடைய நீதிமன்ற நடவடிக்கைகளால் த.வெ.க-வில் யாருக்கும், எந்த அதிருப்தியும் கிடையாது’’
“அம்பாசமுத்திரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படும்போது சீட் கிடைக்காது எனத் தெரிந்தே, ராஜினாமாவைத் திரும்பப் பெற்று மீண்டும் எம்.எல்.ஏ-வாகத் தொடர விரும்பினீர்கள் என்று பேசப்படுகிறதே... உண்மையா?”
``அப்படிச் சொல்வதில் உண்மையும் கிடையாது. கட்சிக்கும் தலைமைக்கும், விசுவாசமாகவும் உண்மையாகவும் இருக்கிறேன். அதனால் இடைத்தேர்தலில் கட்டாயம் சீட் தருவார்கள். இல்லையென்றாலும் சங்கடப்பட மாட்டேன். கட்சி வேறு யாருக்கு வாய்ப்பளித்தாலும், அவரின் வெற்றிக்காக உழைப்பேன். நான் அப்படிப்பட்ட நபர் என்பதும் தலைமைக்கு நன்கு தெரியும். அதனால், இதையெல்லாம் வைத்து யாரும் அரசியல் செய்யத் தேவையில்லை.’’

