ராமேஸ்வரத்தில் விரைவில் தொடங்குகிறது பயணிகள் படகு சேவை.. அக்னிதீர்த்தக் கடலில் இருந்து கடல் வழியாக மண்டபம் வரை வருகிறது பயணிகள் படகு சேவை...
ராமேஸ்வரம் அக்னிதீர்த்தக் கடற்கரையில் இருந்து பாம்பன் கால்வாய் வழியாக மண்டபம் வரை உள்நாட்டுப் பயணிகள் படகு சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில், அக்னிதீர்த்தக் கடற்கரையில் இருந்து பாம்பன் கால்வாய் வழியாக மண்டபம் வரை உள்நாட்டுப் பயணிகள் படகு போக்குவரத்து சேவையை விரைவில் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கான முன்னேற்பாடுகளின் ஒரு பகுதியாக, சாலை மற்றும் ரயில் பாலங்களுக்கு கீழ் படகுகள் பாதுகாப்பாகச் சென்று வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து துறைமுக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
குறிப்பாக, செங்குத்தாக இயங்கும் ரயில் தூக்குப் பாலத்தின் கீழ் படகு கடந்து செல்லத் தேவையான உயரம் மற்றும் அப்பகுதியில் நிலவும் கடல் ஆழம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன.
ராமேஸ்வரத்திற்கு வரும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடல் வழியாகப் பயணம் செய்து, பாம்பன் பாலத்தின் அழகையும் கடல் பகுதியின் இயற்கைக் காட்சிகளையும் ரசிக்கும் வகையில் இந்தப் படகு சேவை திட்டமிடப்பட்டுள்ளது.
அக்னிதீர்த்தக் கடற்கரையில் இருந்து பாம்பன் கால்வாய் வழியாக மண்டபம் வரை படகு பயணம் மேற்கொள்ளும் வகையில் சேவை தொடங்கப்பட்டால், ராமேஸ்வரத்தின் சுற்றுலா நடவடிக்கைகளுக்கு இது கூடுதல் ஈர்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படகுகள் பாலங்களின் கீழ் பாதுகாப்பாகச் செல்லும் வகையில் தேவையான உயரம் மற்றும் கடல் ஆழம் உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்கள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருவதையடுத்து, பயணிகள் படகு சேவை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.