முட்டுக்காடு முகத்துவாரத்தில் துார்வாரும் பணி தொடக்கம்
திருப்போரூர்:முட்டுக்காடு முகத்துவாரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, துார் வாரும் பணி நேற்று தொடங்கியது.
வடகிழக்கு பருவமழையின் போது, சிறுதாவூர், ஆமூர், மானாம்பதி, உள்ளிட்ட ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீர், ஓ.எம்.ஆர்., சாலை, பகிங்ஹாம் கால்வாய் வழியாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் அடுத்த முட்டுக்காடு முகத்துவாரத்தில் கலக்கிறது.
அதேபோல், சோழிங்கநல்லுார் உள்ளிட்ட பகுதிகளின் மழைநீர் மற்றும் கழிவு நீர், பகிங்ஹாம் கால்வாய் வழியாக கடலில் கலக்கிறது.
மேலும், நீர் சுழற்சியின் காரணமாக மேற்கண்ட முகத்துவார பகுதியில், அவ்வப்போது மணல் சேர்ந்து, திட்டுக்கள் உருவாகும். இதனால், மழைநீர் கடலில் சேராமல், குடியிருப்புக்குள் சூழ்ந்து பொதுமக்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டது.
எனவே, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முட்டுக்காடு முகத்துவார பகுதியை துார்வாரி சீரமைக்க நீர்வளத்துறை சார்பில், 1.6 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நீர்வளத்துறை மேற்பார்வையில், முட்டுக்காடு முகத்துவாரத்தில் மண் திட்டுக்களை அகற்றும் பணி நேற்று தொடங்கியது. இதில், பொக்லைன் இயந்திரம் மூலம் நடக்கும் இப்பணியை திருப்போரூர் எம்.எல்.ஏ., விஜயராஜ் கள ஆய்வு மேற்கொண்டு, அங்கிருந்த உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளரிடம் விபரங்களை கேட்டறிந்தார்.
இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் நிர்வளத்துறை சார்பில், வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ளும் வகையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணியாக 42 கோடி ரூபாயில் பணிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில், மேற்கண்ட முட்டுகாடு பகுதியில் 1.6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துார்வாரும் பணி நடக்கிறது. இப்பணி இம்மாதம் முதல் வரும் டிச., மாதம் வரை நடைபெறும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.