என் தந்தை போன்றவர் மஹாதேவப்பா அமைச்சர் பைரதி சுரேஷ் உருக்கம்

பெங்களூரு: ''முன்னாள் அமைச்சர் மஹாதேவப்பா, என் தந்தைக்கு சமமானவர். அரசு இல்லம் தொடர்பாக, அவருடன் எனக்கு எந்த மோதலும் இல்லை,'' என, போக்குவரத்து துறை அமைச்சர் பைரதி சுரேஷ் தெரிவித்தார்.
பெங்களூரு விதான்சவுதாவில், நேற்று அவர் அளித்த பேட்டி:
அரசு இல்லம் தொடர்பாக எனக்கும், முன்னாள் அமைச்சர் மஹாதேவப்பாவுக்கும் இடையே, எந்த மோதலும் இல்லை. இது போன்ற புரளியை கிளப்பி விட்டது யார் என்பது தெரியவில்லை. மஹாதேவப்பா என் தந்தைக்கு சமமானவர். அவரே அந்த இல்லத்தில் வசிக்கட்டும்.
அமைச்சர்களுக்கு இல்லம் ஒதுக்குவது, முதல்வர் முடிவு செய்யும் விஷயமாகும். அந்த இல்லம் காலியாக இருந்ததால், எனக்கு ஒதுக்கினர். இதில் விவாதம் எங்கிருந்து வந்தது என்பது, எனக்கு தெரியவில்லை.
மஹாதேவப்பாவுடன், எனக்கு நல்லுறவு உள்ளது. அவரது வீட்டுக்கு நான் நுாறு முறை சென்றுள்ளேன்; உணவு சாப்பிட்டுள்ளேன். அவர் எனக்கு நண்பர் அல்ல. அவர் என்னை விட பெரியவர். நான் அவரது மகனுக்கு சமம். இல்லத்தின் சுவற்றை இடித்தது, நான் அல்ல. அது என் இல்லமும் அல்ல. சம்பந்தப்பட்ட துறையினர் செய்துள்ள வேலையாகும்.
இல்லம் காலியானதாக, ஆகஸ்ட் 15ம் தேதியன்று கடிதம் வந்தது. தற்போது மஹாதேவப்பா அதே வீட்டில் வசிக்க விரும்பினால், அவரே வசிக்கட்டும். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அந்த இல்லத்தில் வசிக்கும்படி முதல்வர் உத்தரவிட்டால், மிச்சமுள்ள ஒன்றே முக்கால் ஆண்டும், மஹாதேவப்பா அங்கு வசிக்கட்டும். அவரும், நானும் அம்பேத்கர் விசுவாசிகள்.
இவ்வாறு அவர் கூறினார்.