Politics
அன்பில் மகேஸ் வீடுகளில் சோதனை; கைப்பற்றப்பட்டவை என்னென்ன? - அறிக்கை வெளியீடு
அன்பில் மகேஷ் வீட்டில் நடந்த சோதனை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.| A statement has been issued regarding the raid conducted at Anbil Mahesh's residence.

அன்பில் மகேஸ் வீட்டில் நடந்த சோதனை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் வீட்டில் இன்று காலை முதல் மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். சுமார் 8 மணி நேரம் நடைபெற்ற இந்தச் சோதனை நிறைவடைந்த நிலையில், சோதனையில் கைப்பற்றப்பட்ட பொருள்கள் குறித்து செய்தி அறிக்கை வெளியிடபப்ட்டிருக்கிறது.
அந்த அறிக்கையில், ``தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் அரசு அனுமதி பெற்று தருவதாகக் கூறி, பல கோடி மோசடி செய்த வழக்கில், சென்னை மற்றும் திருச்சியில் நடைபெற்ற சோதனையில் சொத்து ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் நிரந்தர அங்கீகாரம், பள்ளி தர உயர்வு, DTCP அனுமதி மற்றும் இதர அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பல கோடி பணம் வசூலித்து மோசடி செய்ததாக அளித்த புகாரின்பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து, இவ்வழக்கில் தொடர்புடைய B.T.அரசகுமார், சுரேஷ் மற்றும் ராஜா ஆகிய 3 எதிரிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கின் விசாரணையின் தொடர்ச்சியாக சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு காவல் குழுவினர், பல்வேறு நபர்களிடம் விசாரணை செய்து, ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்களின் அடிப்படையில், அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி என்பவர் மீது ஊழல் தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இன்று (16.09.2026) அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்குச் சொந்தமான சென்னையில் 2 இடங்கள் மற்றும் திருச்சியில் 2 இடங்கள், இவரது உதவியாளர்களான வாலாடி கார்த்திக், அருண் பிரகாஷ் மற்றும் பிரகாஷ் ஆகியோருக்குச் சொந்தமான இடங்கள் என மொத்தம் 9 இடங்களில் சென்னை, மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தச் சோதனையில் சொத்து ஆவணங்கள், வங்கி விவரங்கள், காசோலைகள் ஆகியவற்றுடன் சேர்த்து வழக்கு சம்பந்தமாக 118 ஆவணங்கள், செல்போன்கள்–18, Laptop–3, Pendrive–8, Desktop (inbuild Hard Disk)–2, Tablet–1, Apple I pad –1 கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் இவ்வழக்கில் சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து, விசாரணை செய்து வருகின்றனர்" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.





/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
