Arts, culture, entertainment and media
சினிமா உலகில் மற்றொரு விவாகரத்து... மனைவியைப் பிரிந்தார் 'மஞ்சும்மல் பாய்ஸ்' பட நடிகர்!

'மஞ்சும்மல் பாய்ஸ்' படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் தனது மனைவியைப் பிரிந்துவிட்டதாக அறிவித்திருக்கிறார்.
சமீபகாலமாக சினிமா உலகில் விவாகரத்து அதிகமாகி வருகிறது. ரவி மோகன், ஜி.வி.பிரகாஷ் போன்றோர் அண்மையில் தங்கள் மனைவிகளைப் பிரிந்தனர். இவர்கள் வரிசையில் அடுத்ததாக தனது மனைவியைப் பிரிந்ததை உறுதிபடுத்தியிருக்கிறார் 'மஞ்சும்மல் பாய்ஸ்' பட நடிகர். மலையாள சினிமாவின் இளம் நடிகர்களில் ஒருவர் ஸ்ரீநாத் பாஸி. 'ஹோம்' மற்றும் 'மஞ்சும்மல் பாய்ஸ்' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர்.
'மஞ்சும்மல் பாய்ஸ்' படத்தில் குழிக்குள் விழும் சுபாஷ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஸ்ரீநாத் பாஸி. இதன் மூலம் மலையாளத்தைத் தாண்டியும் பிரபலமானார். இந்த நிலையில் தான் ஸ்ரீநாத் பாஸி தனது 10 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக அறிவித்திருக்கிறார்.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ரீத்து ஜக்காரி என்பவரை ஸ்ரீநாத் பாஸி கடந்த 2016-ல் திருமணம் செய்துகொண்டார். ஸ்ரீநாத் பாஸி விஜே-வாக இருந்து சினிமாத் துறைக்குள் வந்தவர். அவர் விஜே-வாக பணிபுரிந்தபோது ரீத்துவை முதன் முதலில் சந்தித்திருக்கிறார். திருமணம் செய்வதற்கு 10 ஆண்டுகள் முன்பே அவர்கள் நண்பர்களாக இருந்திருக்கின்றனர். அதன்பின் திருமணம் செய்து தம்பதிகளான இவர்கள், கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து தற்போது விவாகரத்து பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர்.
தனது அடுத்தப் படம் தொடர்பான நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீநாத் பாஸி, "விவாகரத்துக்குப் பிறகு, நான் இப்போது என் பெற்றோருடன் தங்கியிருக்கிறேன். 2024-ல் எனது மனைவியைப் பிரிந்தேன். இது யாருக்கும் தெரியாது. இப்போது தான் முதன் முதலில் பேசுகிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
