Crime, law and justice
தாய்மாமன் தங்க மோதிரம்: 2,035 குழந்தைகள் தேர்வு
உடுமலை: தமிழக அரசின் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 2,035 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். செப். மூன்றாவது வாரத்தில் நடைபெற உள்ள விழாவில், குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் அணிவிக்கப்பட உள்ளது.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் இத்திட்டத்தை, முதல்வர் விஜய் கடந்த ஜூன் 22-ம் தேதி அறிவித்தார். திட்டத்துக்கு 755.83 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பயனாளிகளை தேர்வு செய்ய மருத்துவக் கல்லுாரி டீன் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, தலைமை அரசு மருத்துவமனை மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவம் செய்த தகுதியான தாய்மார்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
கர்ப்பிணிகள் PICEME மற்றும் RCH ID-யில் பதிவு செய்திருக்க வேண்டும். அரசு மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் பிரசவம் நடந்திருக்க வேண்டும். வீட்டில் பிறக்கும் முதல் குழந்தை மட்டுமே, திட்டத்தில் கணக்கில் கொள்ளப்படும் என வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
செப். 15-ல் விழா? முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளில் ஆயிரம் பேருக்கு, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரியில் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. சென்னையில் முதல்வர் திட்டத்தை துவக்கி வைக்கும் அதே நாளில், திருப்பூரிலும் விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.