Crime, law and justice
"தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தாமதமாக தொடங்க வாய்ப்பு" - அமைச்சர் அருண்ராஜ் தகவல்!

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் ஜூன் 22 முதல் பிறந்த ஒவ்வொரு குழந்தையையும், மற்றும் தாயையும் கௌரவிக்கும் விதமாக தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் முதலமைச்சர் வெளிநாடு பயணம் காரணமாக சற்று தள்ளிப் போகிறது என அமைச்சர் அருண்ராஜ் தகவல் தெரிவித்திருக்கிறார்.
முதலமைச்சர் விஜய் தலைமையில், வெற்றித் தமிழகம் தொலைநோக்கு திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியதன் கீழ் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் ஜூன் 22 முதல் பிறந்த ஒவ்வொரு குழந்தையையும், மற்றும் தாயையும் கௌரவிக்கும் விதமாக தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. இதில் ஒரு கிராம் எடையுள்ள 4,41,667 தங்க மோதிரங்கள் வழங்க அரசாணை வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, இந்த திட்டத்தின் கீழ் மோதிரம் வழங்க ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்திற்கும் இந்த விலைப்புள்ளியை ஒப்பிட்டு இசைவளித்த கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்திற்கும் 70:30 என்ற சதவீதத்தில் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இத்திட்டமானது பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான 2026 செப்டம்பர் 15ஆம் தேதி துவக்கி வைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பிரிட்டன் பயணம் மேற்கொள்கிறார். இதன் காரணமாக தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் சற்று தள்ளிப் போகிறது என அமைச்சர் அருண்ராஜ் தகவல் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண் ராஜ், "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் முதலமைச்சர் வெளிநாடு பயணம் காரணமாக சற்று தள்ளிப் போகிறது. தாய்மாமன் தங்க மோதிர திட்டம் 25ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும். மதுரை உசிலம்பட்டியில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது" என்றும் அவர் கூறினார்.



/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
