'நீட் தேர்வில் வென்றும் இட ஒதுக்கீட்டில் பெயர் இல்லை'-மாணவியின் முடிவால் உருக்குலைந்த குடும்பம்

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நீட் தேர்விற்கு அனுப்பிவிட்டு அவர்கள் தேர்ச்சி பெற வேண்டும். வேறு எந்த அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாது என்று அடிமடியில் நெருப்பை கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இதுவரையிலும் நீட் தேர்வில் வெற்றி பெறாத மாணவ மாணவிகள் விரக்தியில் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டிருப்பதை தான் இதுவரையிலும் தமிழ்நாடு கண்டிருக்கிறது. ஆனால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் மருத்துவ படிப்பில் முதற்கண்ட ஒதுக்கீட்டில் பெயர் இடம் பெறாததால் அந்த மாணவி மனம் நொறுங்கி தற்கொலை செய்து கொண்டது இதுவே முதன்மையானது என்று பார்க்கப்படுவதோடு அந்த மாணவியின் குடும்பம் மகளைப் பறிகொடுத்த நிலையில் உருக்குலைந்து போயிருக்கிறது என்கிற வேதனைச் சம்பவம் நடந்தது இதுவே முதன்முறையாகும் என்கிறார்கள்.
நெல்லையின் பாளையை ஒட்டியுள்ள அன்பு நகரின் சித்தார்த்தர் ஏரியாவைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். ஐ.டி.நிறுவனத்தில் பணிபுரியும் இவரது குடும்பம் சொல்லும் படியான வசதி கொண்டது. அரிகிருஷ்ணனுக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள். மூத்தவள் ஸ்ருதிலயா, தனியார் பள்ளியில் 2023ம் ஆண்டு பிளஸ் 2 படிப்பை முடித்திருக்கிறார். இவரது தங்கையோ நகரிலுள்ள முதன்மையான மெட்ரிக் பள்ளியில் படித்து வருபவர். இப்படி தன்னுடைய பிள்ளைகளை நகரின் உயரிய கல்வி நிலையத்தில் படிக்க வைத்திருக்கிறார் தந்தை அரிகிருஷ்ணன். இதனிடையே 2023ம் ஆண்டு பிளஸ் 2 படிப்பை முடித்த ஸ்ருதிலயாவை (21) மருத்துவப் படிப்பில் சேர்க்கும் பொருட்டு தந்தை அரிகிருஷ்ணன் நகரிலுள்ள முதன்மையான கோச்சிங் சென்டரில் சேர்த்திருக்கிறார்.
இயல்பிலேயே நன்றாகப் படிக்கும் ஸ்ருதிலயா நீட் கோச்சிங் படிப்பிலும் சிறந்த முறையிலேயே பயிற்சி எடுத்திருக்கிறார். கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய ஸ்ருதிலயாவிற்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காத நிலையில் இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றுவிட வேண்டும் என்று முழு முயற்சியுடன் படித்துள்ளார். அவருடைய கடும் முயற்சியின் காரணமாக அவர் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்திருக்கிறார். தற்போது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மருத்துவப் படிப்பிற்கான முதற்கட்ட கவுன்சிலிங் நடந்து வருகிறது. மருத்துவப் படிப்பிற்கு தேர்வானவர்களுக்கான பட்டியல் வெளியான நிலையில் அதில் ஸ்ருதிலயாவின் பெயர் வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்து மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதையறிந்த அவரது பெற்றோர்களும் அவரை சமாதானப்படுத்தி இருக்கிறார்கள். இதனிடையே நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கச் சென்ற ஸ்ருதிலயா நேற்று அதிகாலை அவரது அறையில் காணவில்லை என்றதும் அவரது பெற்றோர் அதிர்ச்சியில் பதைபதைத்தவர்கள் காம்பவுண்ட் பகுதியில் தேடியும் கிடைக்காமல் போகவே வீட்டின் பின்புறமுள்ள செட்டில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடம் வந்த பெருமாள்புரம் போலீசார் ஸ்ருதிலயாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். மேலும் இது தொடர்பான அவர்களின் விசாரணையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் முதற்கட்ட ஒதுக்கீட்டில் பெயர் இடம் பெறாததால் விரக்தியடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்திருக்கிறது.
மாணவி ஸ்ருதிலயாவின் இந்த தற்கொலை அவரது பெற்றோரை மட்டுமல்லாது அந்தக் குடும்பத்தையே உலுக்கியிருக்கிறது. வேதனையை வெளிப்படுத்த முடியாமல் கதறிக்கொண்டிருக்கிறது மகளைப் பறிகொடுத்த அந்தக் குடும்பம்.
தன் மகள் நீட்டில் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும் என்று அவரை நகரிலேயே முதன்மையாக பேசப்படுகிற அந்த கோச்சிங் சென்டரில் பணத்தை ஒரு பொருட்டாக கருதாமல் பெற்றோர் அவரை அந்த சென்டரில் சேர்த்திருக்கிறார்கள். என் அளவில் நீட் தேர்விற்கான அனைத்தையும் நன்றாக பிக்கப் செய்துள்ளேன். இந்த தடவை நல்ல ரேங்கில் தேர்ச்சி பெறுவேன் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது. தேர்ச்சி பெற்று கவுன்சிலிங்கில் இடம் கிடைத்து எனக்கு திருநெல்வேலிலேயே மருத்துவப் படிப்பிற்கான இட ஒதுக்கீடு கிடைக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது என்று தன் பெற்றோர்களிடம் அடிக்கடி சொல்லி வந்திருக்கிறாராம் ஸ்ருதிலயா. இதனிடையே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல்கள் வெளிவந்ததில் ஸ்ருதிலயா நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றது தெரியவர அவர் மிகவும் சந்தோஷமாகியிருக்கிறார்.
ஆனால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் மருத்துவப்படிப்பிற்கான முதற்கட்ட ஒதுக்கீட்டில் ஸ்ருதிலயாவின் பெயர் இடம் பெறாமல் போனது அவரை வெகுவாக பாதித்திருக்கிறது. மனதளவில் உடைந்துபோய் மன உளைச்சலில் இருந்த ஸ்ருதிலயாவின் நிலையைக் கண்டு அதிர்ந்து போன அவரது பெற்றோர்கள் அவரை சமாதானப் படுத்தியிருக்கிறார்கள். மகளுக்கு எதுவும் நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக; ''கவலைப்படாதம்மா முதல்கட்ட ஒதுக்கீட்டிலதான பேர் இல்ல, இந்த கவுன்சிலிங் முடிந்து அடுத்தக்கட்ட இட ஒதுக்கீட்டில் உன் பெயர் நிச்சயமாக இடம் பெறும். வாய்ப்பிருக்கிறது. நாம் காத்திருப்போம். பதட்டம் வேண்டாம்'' என்று பெற்றோர் ஸ்ருதிலயாவிற்கு ஆறுதல் சொல்லிய வண்ணம் இருந்திருக்கிறார்கள். இத்தனையும் மீறித்தான் மனமுடைந்து நொறுங்கிப் போன அந்த மாணவி ஸ்ருதிலயா தற்கொலை செய்த கொண்டது அந்த குடும்பத்தையே நிர்மூலமாகியிருக்கிறது.
எவ்வளவோ எடுத்துச் சொல்லி சமாதானப்படுத்தியும் இப்படி நடந்துபோய் விட்டதே. வாழ வேண்டிய மகளை பறிகொடுத்த நிலையில் அந்த குடும்பமும் கதறிக்கொண்டிருக்கிறது. நாம் அவர்களிடம் பேச முயன்றபோது, மகளைப் பறிகொடுத்த பெற்றோர் மனமுடைந்த நிலையில் பேசுகிற மனநிலையில் இல்லையாம் என்று தெரிவித்தனர்.
நீட் தேர்வுதான் மாணவ மாணவிகளின் உயிரை காவு வாங்குகிறது என்றால் தேர்ச்சி பெற்றும் இடம் கிடைக்காத சம்பவம் கூட மாணவியை காவு கொண்டிருப்பது வேதனையில் வேதனை.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)