Politics
முதல்வர் விஜய் ‘சமூக நீதி நாள் உறுதிமொழி’ ஏற்பு!

தந்தை பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை தலைமைச் செயலகத்தில், தந்தை பெரியார் உருவப் படத்திற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் இன்று (17.09.2026) மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து தொடர்ந்து சமூக நீதி நாள் உறுதிமொழியை முதலமைச்சர் வாசித்தார். அந்த உறுதிமொழியில், “பிறபொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற அன்பு நெறியையும், “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறைகளாகக் கடைப்பிடிப்பேன்.
சுயமரியாதை, ஆளுமைத் திறனும், பகுத்தறிவுப் பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும். சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன். மானுடத்தின் மீது பற்றையும், மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன். சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைத்திட இந்த நாளில் உறுதி ஏற்கிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சாய் குமார், அரசுத் துறைச் செயலாளர்கள், காவல்துறை மற்றும் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
முன்னதாக சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் உருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள உருவப் படத்திற்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, வெங்கடரமணன், ராஜ் மோகன், வன்னி அரசு, மரிய வில்சன், குமார் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் அருண் தம்புராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)