'அல்-குவைதா'வுடன் தொடர்புடையவரை கோவையில் 'துாக்கியது' உ.பி., போலீஸ்

கோவை: தமிழகம் மற்றும் உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் இணைந்து நடத்திய விசாரணையில், கோவையில் தங்கியிருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு மேன்பவர் ஏஜென்சி வாயிலாக, கோவைக்கு பணிக்கு வந்தவர், உத்தரபிரதேசத்தை சேர்ந்த மக்சூத் அலி, 21. இவர், ஆன்லைன் மூலம் இளைஞர்களை, பயங்கரவாத செயல்பாடுகளுக்கு ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்., 12ம் தேதி, முகமது நபீல் என்பவரை, 'உபா' எனும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில், உத்தரபிரதேச போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், கோவையில் தங்கி, பயங்கரவாத ஆதரவு செயல்களில் ஈடுபட்டு வந்த மக்சூத் அலி குறித்த தகவல் கிடைத்தது.
அதன்படி, உ.பி., தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார், கோவை மண்டல தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாருடன் இணைந்து, கோவையில் விசாரணை நடத்தினர்.
சம்பந்தப்பட்ட நபர், கோவை ஹோப்காலேஜ் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி, பணிக்கு சென்று வந்தார்.
நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின், விசாரணைக்காக உ.பி., போலீசார் அவரை அழைத்து சென்றனர்.
இவருக்கு, அல் -குவைதா அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும், இவரது, 'வாட்ஸாப்' எண்ணில், பா கிஸ் தான் சார்ந்த பல எண்கள் இருப்பதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
கோவை போலீசார் கூறுகையில், 'செப்டம்பர் முதல் வாரம் இந்நபர் கோவை வந்துள்ளார். சமூக வலைதளங்கள் வாயிலாக குழுவை உருவாக்கி, பயங்கரவாத கருத்துகளை பரப்பி வந்துள்ளார்.
'தகவல் தொடர்புக்காக, செயலி ஒன்றை உருவாக்கி உள்ளனர். உ.பி., போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர். கோவையில் இவர் வேறு யாருடன் தொடர்பில் இருந்தார் என்பது குறித்தும் விசாரிக்கிறோம்' என்றனர்.
