Lifestyle and human interest
’சமாளிக்க முடியல..’ - கைவிட்ட நட்பு நாடுகள்.. எகிப்திடம் உதவி கோரிய சவூதி!

செங்கடல் மற்றும் பாப் எல்-மண்டேப் (Bab al-Mandeb) ஜலசந்திப் பகுதிகளில் ஹவுதி அமைப்பினர் தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் நிலையில், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் கடுமையான தட்டுப்பாடு மற்றும் சர்வதேச விலை உயர்வுக்கான அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, சவூதி எகிப்தின் உதவியைக் கோரியுள்ளது.
மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிராக ஒரு தாக்குதல் நடைபெற்றுவரும் நிலையில், மறுபக்கம் ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி அமைப்பினர் ஏமன் மீது நடத்தப்படும் அடுத்தடுத்த தாக்குதல்களால் சவூதி சற்றே நிலைகுலைந்துள்ளது என்றே சொல்லலாம். குறிப்பாக, சமீபத்திய தாக்குதலில் ஹவுதி அமைப்பினர் ஏமனின் நிலப்பரப்பில் உள்ள சில பகுதிகளைக் கைப்பற்றியுள்ளனர். ஏமன் நாட்டின் முக்கியப் பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, அங்கிருந்து சவூதியின் மீது ஹவுதி அமைப்பினர் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இதனால் எண்ணெய் விநியோக முனையங்களான நஜ்ரான் மற்றும் ஜிசான் (Najran & Jizan),சவூதி அரம்கோ (Aramco) சுத்திகரிப்பு ஆலை மற்றும் இயற்கை எரிவாயு நிலையங்கள், கிழக்கு மேற்காகக் கொண்டுசெல்லப்படும் முக்கிய எண்ணெய்க் குழாய்கள் ஆகியன தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் கடுமையான தட்டுப்பாடு மற்றும் சர்வதேச விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, உலகின் முக்கிய கடல்வழி வர்த்தகப் பாதையான பாப் எல்-மண்டேப் வழியாகச் செல்லும் எண்ணெய் தாங்கிச் செல்லும் கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாவதால், வர்த்தகக் கப்பல்கள் அப்பாதையைத் தவிர்க்கத் தொடங்கியுள்ளன.
அதேநேரத்தில், கப்பல்கள் செங்கடலுக்குப் பதிலாக ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனையை (Cape of Good Hope) சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. இதனால், பயண நேரம் 10 முதல் 14 நாட்கள் வரை அதிகரிப்பதுடன், கடல்வழிப் போக்குவரத்துச் செலவு மற்றும் காப்பீட்டுக் கட்டணங்கள் உயர்ந்துள்ளன. உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் சவூதியும் ஒன்று. அது, சராசரியாக நாளொன்றுக்கு 60 முதல் 73 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய்யை சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்கிறது.
சவூதி அரேபியா ஏற்றுமதி செய்யும் கச்சா எண்ணெய்யில் 70%-க்கும் அதிகமானவை சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற ஆசிய நாடுகளுக்கே செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, செங்கடல் மற்றும் பாப் எல்-மண்டேப் (Bab al-Mandeb) ஜலசந்தி வழியிலான வணிகக் கப்பல்கள் மற்றும் எண்ணெய் தாங்கிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சவூதி அரேபியா, எகிப்தின் உதவியை நாடியுள்ளது. எகிப்து நேரடியாக ராணுவத்தை அனுப்பும் எனச் சொல்லப்படாவிட்டாலும், அரபு நாடுகள் மத்தியில் சவூதி அரேபியாவின் அரசியல் நடவடிக்கைகளுக்கு ஆதரவைத் திரட்ட எகிப்தின் செல்வாக்கு அவசியம் எனக் கூறப்படுகிறது.