Lifestyle and human interest
Mecca-விற்கு வரலாற்றில் முதன்முறையாக சவூதி எச்சரிக்கை! - மெக்காவைத் தாக்கியதா ஏமனின் ஹூதி?
மெக்கா, ஜெட்டா உள்ளிட்ட பகுதிகளுக்கு சவூதி எச்சரிக்கை விடுத்த நிலையில், மெக்காவை குறிவைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை ஹூதிகள் மறுத்துள்ளனர்|Saudi Arabia issued its first wartime alert for Mecca amid escalating Houthi attacks, while the Houthis denied targeting the holy city.

ஹூதி ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களுக்கு மத்தியில் மெக்காவுக்கு முதன்முறையாக அவசர எச்சரிக்கை விடுத்தது சவூதி அரேபியா.
மத்திய கிழக்கில் ஈரான் போரைத் தாண்டி சவூதி அரேபியா - ஏமனின் ஹூதிப் படைகளுக்கு இடையே கடுமையான தாக்குதல்கள் நடந்துகொண்டிருக்கின்றன.
ஜூலை மாதம் தொடங்கிய இந்த மோதல் போக்கு தீவிரமாக இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
ஹூதிகள் சவூதி மீது ஏவுகணைகள், டிரோன்கள் போன்ற வான்வழித் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.
முஸ்லிம்களின் புனிதத் தலங்கள் மெக்கா - மதீனா. ஹூதிகளின் வான்வழித் தாக்குதலையொட்டி, மெக்கா நகரத்திற்கு வரலாற்றிலேயே முதன்முறையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சவூதியின் பாதுகாப்புப் படை, “அவசரகால தேசிய முன்கூட்டிய எச்சரிக்கை மையத்திடமிருந்து உங்களுக்கு எச்சரிக்கைச் செய்தி வந்தால் உடனடியாக அருகிலுள்ள பாதுகாப்பான இடத்திற்குச் செல்லவும்.
திறந்தவெளிகள், ஜன்னல்கள் மற்றும் கண்ணாடிகளை விட்டுத் தள்ளி இருக்கவும்.
வெளியில் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள கட்டடத்திற்குள் செல்லவும்” போன்ற எச்சரிக்கையைத் தனது எக்ஸ் பக்கத்தில் சவூதியில் இருக்கும் மக்களுக்குச் சொல்லியிருந்தது.
இந்தப் பதிவு நேற்று மதியம் பதிவிடப்பட்டிருந்தது.
அடுத்த 7 நிமிடங்களிலேயே, “மெக்கா நகரில் இருந்த ஆபத்து விலகியது” என்று சவூதி பாதுகாப்புப் படை தங்களது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தது.
சவூதியின் இந்தக் கூற்று குறித்து ஹூதிகள், “மெக்கா நகர் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஏற்கெனவே பலமுறை சொல்லப்பட்ட, காலாவதியான பொய்களாகும்.
இவை இனி யாரையும் ஏமாற்றப் போவதில்லை” என்று கூறியுள்ளனர்.
