Politics
ஒன்றிய அளவிலான கலைத்திருவிழா போட்டி
ரிஷிவந்தியம்: அரியலுாரில் நடந்த ஒன்றிய அளவிலான கலைத் திருவிழா போட்டியில் பரதநாட்டியத்தில் சின்னக்கொள்ளியூர் தொடக்கப்பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்தனர்.
வாணாபுரம் அடுத்த அரியலுாரில் நடந்த ஒன்றிய அளவிலான கலைத் திருவிழா போட்டிக்கு வட்டாரக் கல்வி அலுவலர்கள் கஜேந்திரன், தில்லைக்கரசி தலைமை தாங்கினர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார்.
ஏற்கனவே பள்ளி அளவிலும், குறுவள மைய அளவிலும் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகள் ஒன்றிய அளவில் நடந்த கலைத்திருவிழா போட்டிகளில் பங்கேற்றனர்.
இதில், 1 மற்றும் 2ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 9 வகையான போட்டிகள் நடந்தது. அதேபோல், 3 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 15 வகையான போட்டிகளும், 6 முதல் 8 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 18 வகையான போட்டிகளும் நடத்தப்பட்டது.
இதில் குழுப்போட்டியில் பரதநாட்டியத்தில் சின்னக்கொள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்தனர். முதலிடம் பெற்ற மாணவிகளை ஆசிரியர்கள் பாராட்டினர்.