Crime, law and justice
டாக்டராக பணிக்கு வராமல் ரூ.70,000 ஊதியம் பெறும் காங். எம்எல்ஏவின் உறவினர்; விசாரணையில் அம்பலம்

பாகல்கோட்: கர்நாடகாவில் காங். எம்எல்ஏ உறவினர் அரசு மருத்துவராக பணியாற்றிக் கொண்டே முதுகலை மருத்துவ படிப்பை தொடர்வதும், மாதம் ரூ.70,000 சம்பளம் பெற்றும் மருத்துவமனைக்கு வராததும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பாகல்கோட் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ உமேஷ் மேட்டி. இவரின் மருமகள் அங்கிதா ஆர்யரகால். மருத்துவரான இவர், வாம்பே காலனியில் உள்ள நம்ம கிளினீக்கில் (நம்ம கிளினீக் என்பது ஏழைகள் இலவச ஆரம்ப சுகாதார சேவைகளை பெற கர்நாடக அரசால் தொடங்கப்பட்ட மருத்துவமனை திட்டம்) டாக்டராக இருக்கிறார். ஏப்.2025ல் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட இவருக்கான மாத ஊதியம் ரூ.70,000 ஆகும்.
ஆனால் இவர் மருத்துவமனைக்கு வராமல் ஊதியம் பெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாகல்கோட் தாலுகா மருத்துவ அதிகாரி சரஸ்வதி மேகி, ஆய்வுக்காக சென்ற போது மருத்துவமனையில் அங்கிதா ஆர்யரகால் இல்லாததும், பல மாதங்களாக அவர் பணிக்கு வராமல் ஊதியம் பெற்று வருவதும் தெரிய வந்தது.
மேலும் ஆய்வின் போது, 2026ம் ஆண்டு மார்ச் முதல், தனியார் மருத்துவ கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பு பயின்று கொண்டே டாக்டராகவும் பணியாற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இது விதி மீறல் என்பதால், விசாரணைக்கு ஆஜராகுமாறு அங்கிதாவுக்கு உத்தரவிடப்பட்டும், செல்லவில்லை. எனவே செப்.18ம் தேதி அவர் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
விசாரணையின் முடிவில், அங்கிதா மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால் அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் உள்ளிட்ட சலுகைகள் அனைத்தும் திரும்ப பெறப்படும். மேலும் அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


