Politics
‘ரெய்டு அஸ்திரத்தை ஏவியுள்ளது எதற்கும் இலாயக்கற்ற த.வெ.க. அரசு” - மு.க.ஸ்டாலின் கண்டனம்!

முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வீட்டில் இன்று (16-09-26) காலை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த திமுக ஆட்சியின் போது பள்ளி அங்கீகாரத்தைப் புதுப்பிக்கவும், தடையில்லா சான்றிதழை பெறவும் தனியார் பள்ளிகளிடம் லஞ்சம் பெற்றதாக தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அண்மையில் குற்றம் சாட்டியிருந்தது. அதாவது இந்த லஞ்சப் புகாரில், முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பெயரும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு பி.டி.அரசகுமார் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், திருச்சி தென்னூர் அண்ணா நகரில் உள்ள அன்பில் மகேஸ் பொய்யாமொழி வீட்டில் இன்று காலை 7 மணி முதல் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் இருந்து 2 வாகனங்களில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அன்பில் மகேஸ் இல்லம் உள்பட அவருக்கு சொந்தமான 6 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த சோதனை நடவடிக்கைக்கு முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, “அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீது ரெய்டு: மற்றுமொரு திசைதிருப்பும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை. தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டினால் பாதிக்கப்படும் மக்களின் போராட்டங்கள், பட்டினப்பாக்கம் மீனவர்கள் போராட்டம், நேபாளத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் உரிய பதில் கிடைக்காமல் தலைமைச் செயலகம் முன் போராட்டம், ஆவின் பால் தட்டுப்பாட்டால் மக்கள் பரிதவிப்பு, இராமநாதபுரம் இரட்டைக் கொலை, சென்னையில் பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் அடித்துக் கொலை, அயனாவரத்தில் பெண் காவலரிடம் த.வெ.க. நிர்வாகி சீண்டல் என மாநிலத்தை உலுக்கி வரும் எதையும் கண்டுகொள்ளாமல் இலண்டனில் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்.
இந்தப் பிரச்சினைகளைச் சரிசெய்ய முடியாத விரக்தியில், மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் மீது ரெய்டு அஸ்திரத்தை ஏவியுள்ளது எதற்கும் இலாயக்கற்ற த.வெ.க. அரசு. இந்த அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையைச் சட்டரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம். எதிர்க்கட்சி மீது ரெய்டு நடத்துவதால் மக்கள் கோபத்தைத் தணிக்க முடியாது. பொய்யான குற்றச்சாட்டுகளும் சட்டத்தின் முன் நிலைக்காது என்பதை இந்த அரசு விரைவில் உணரும்” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)





