தங்கமீனை சிவபெருமானுக்கு அர்ப்பணித்த அதிபத்த நாயனார்... புதுச்சேரியில் வெகு விமரிசையாக நடைபெற்ற குருபூஜை..!...

புதுச்சேரியில் அதிபத்த நாயனார் தங்கமீனை சிவபெருமானுக்கு அர்ப்பணித்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் கடலில் தத்ரூப காட்சி அரங்கேற்றப்பட்டது.
அதிபத்த நாயனார் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த 63 நாயன்மார்களுள் ஒருவராவார். மீன் பிடிப்பதை தொழிலாகக் கொண்டிருந்த இவர், தன்னுடைய சிவபக்தியின் காரணமாக, தான் பிடிக்கும் மீன்களில் சிறந்த ஒன்றை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
சில நாட்களில் ஒற்றை மீனே பிடிபட்டாலும் அதனை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்து விட்டு, வெறுங்கையுடன் திரும்புவார். இதனால் வறுமையால் வாடினார். ஒரு சமயம் சிவபெருமான் அதிபத்தரை சோதிக்க எண்ணி ஒரு மீனும் பிடிபடாத நாளில், இரத்தினங்கள் பதிந்த தங்க மீனை வலையில் சிக்குமாறு செய்தார்.
ஆனால் தீவிர பக்தரான அதிபத்தர், அதனையும் சிவபெருமானுக்கே அர்ப்பணம் செய்தார். இவ்வாறு தான் வறுமையிலும், பசியிலும் வாடிய பொழுதும், சிவபெருமானுக்கு சமர்ப்பிக்கும் வழக்கத்தை கொண்டவராக அதிபத்தர் விளங்கியமையால் அவரை நாயன்மார்களில் ஒருவராகப் போற்றுகின்றார்கள்.
இதையும் படிங்க: தமிழகத்தில் குழந்தைகளுக்கு புதிய வைரஸ் தொற்று: அறிகுறிகள் என்ன..? தப்புவது எப்படி..?
அதிபத்தரின் சிவ தொண்டை நினைவுபடுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் அதிபத்த நாயனார் குருபூஜையாக நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் அருள்மிகு செங்கழுநீர் அம்மன் ஆலயத்தில் எழுந்தருளி உள்ள அதிபத்த நாயனாரின் 5-ம் ஆண்டு குருபூஜை சோலை நகர் கடற்கரையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கடற்கரையில் சிவபெருமான் எழுந்தருள, கடலில் படகில் சென்ற அதிபத்தர் கடலில் மீன் பிடிப்பது போன்றும், பிடித்த மீனை சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் வகையில் மீண்டும் கடலில் விடுவது போன்றும் இளைஞர்கள் வான வேடிக்கையுடன் தத்ரூபமாக செய்தனர். இதனை கடற்கரையில் கூடியிருந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். தொடர்ந்து கடற்கரைக்கு திரும்பிய அதிபத்திற்கு சிறப்பு வரவேற்பு பூஜைகளும் நடைபெற்றது.
இதையும் படிங்க: நீலகிரி பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் காக்கும் ஆதிமலை..! இந்தியா முழுவதும் விற்பனையாகும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள்..!
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அதிபத்தரையும் சிவபெருமானையும் வணங்கி சென்றனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊர் பொது மக்களுக்கு இளைஞர்கள் செய்திருந்தனர். தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
