மீன்பிடி துறைமுகம் அமைப்பது குறித்து மீனவர்களிடம் அமைச்சர் பேச்சுவார்த்தை

மரக்காணம்: மீன்பிடி துறைமுகம் அமைப்பது குறித்து மீனவர்களிடம் அமைச்சர் மற்றும் கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், கோட்டக்குப்பம் பகுதியில் 19 மீனவர்கள் கிராமங்கள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக, இப்பகுதி மீனவர்கள் சிறிய மீன் பிடி துறைமுகம் அமைக்க கோரி அரசிடம் மனுக்கள் கொடுத்து, போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் சட்டசபையில் மீன்பிடி துறைமுகம் அமைப்பது குறித்து இந்த பகுதிக்கு எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடாத கண்டித்து நேற்று முன்தினம் இ.சி.ஆர்., அனுமந்தையில், 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.
அதிகாரிகள் பேச்சு வார்த்தையால் போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், நேற்று அமைச்சர் வன்னி அரசு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், எஸ்.பி.மதிவாணன் ஆகியோர் அனுமந்தை கிராமத்திற்கு சென்று மீனவர்களை சந்தித்து மீன்பிடி துறைமுகம் அமைப்பது குறித்து கருத்துகளை கேட்டறிந்தனர்.
புயல், மழை காலங்களில் கடலில் ஏற்படும் சீற்றத்தால் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களின் படகுகளை பாதுகாப்பாக நிறுத்த முடியாமல் கடல் சீற்றத்தில் சிக்கி படகு மூழ்கி சேதம் அடைகிறது. இதில் மீனவர்கள் உயிரிழப்பும் ஏற்படுகிறது.
இதுகுறித்து மத்திய, மாநில அரசிடம் பல ஆண்டுகளாக புகார் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. இதனால் இந்த பகுதியில் துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு அதிகாரிகள் அமைச்சர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மீனவர்கள் கோரிக்கையை அமைச்சர் மற்றும் கலெக்டர் கேட்டறிந்தனர். பின் இதுகுறித்து அரசிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.