மரக்காணத்தில் மீன் பிடி துறைமுகம் அமைப்பது குறித்து சட்டசபையில் பேசாததால் போராட்டம்

மரக்காணம்: மரக்காணத்தில் மீன் பிடி துறைமுகம் அமைப்பது குறித்து சட்டசபையில் பேசாததால் இ.சி.ஆர்., சாலையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், கோட்டக்குப்பம் பகுதியில், 19 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப்படகு மூலம் மீன் பிடித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் மீன்பிடி துறைமுகம் இல்லாததால் மழை, புயல் காலங்களில் மீனவர்கள் படகுகளை கடலுார் பகுதியில் உள்ள துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி செல்கின்றனர்.
அங்கு பலவித கட்டுப்பாட்டால் மீனவர்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் மழை, புயலின் போது மீனவர்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர்.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம், விழுப்புரம் மாவட்டத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக, இரு மாவட்ட மீனவர்களும் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.
கடந்தாண்டிற்கு முன் விழுப்புரம் மாவட்டம், அழகன் குப்பம் பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைக்க மத்திய மாநில அரசு நிதி ஒதுக்கியது ஆனால் சில காரணங்களால் அந்தப் பணி நிறுத்தப்பட்டது.
கடந்த ஆண்டுக்கு முன், 19 மீனவ கிராம மக்களும் மீன்பிடி துறை அமைக்க வேண்டும் என அனுமந்தை இ.சி.ஆர்., சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்பொழுது வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீனவர்களிடம் மீன் பிடி துறைமுகம் அமைக்க அரசிடம் பரிந்துரை செய்வதாக கூறினர்.
இதனால் மீனவர்கள் அப்பொழுது போராட்டத்தை கைவிட்டனர். இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் மரக்காணம் பகுதி மீனவர்கள், மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் மினி துறைமுகம் அமைக்க வேண்டும் என மனுக்களை கொடுத்துள்னர்.
நேற்று முன்தினம் சட்டசபையில் நடந்த மீன்வளத்துறை மானிய கோரிக்கையின் போது மரக்காணத்தில் துறைமுகம் அமைப்பது குறித்து தமிழக அரசு சார்பில் தகவல் வெளியாகும் என மீனவர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால் எந்த ஒரு தகவலும் வெளிவராததால் நேற்று காலை 9:00 மணிக்கு சென்னை - புதுச்சேரி இ.சி.ஆர். சாலை அனுமந்தையில்,100க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்ட எஸ்.பி., ரூபன் குமார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்பொழுது மீனவர்களிடம் அதிகாரிகள் கூறுகையில், ' மரக்காணம் பகுதியில் துறைமுகம் அமைக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இதனால் மீனவர்கள் எந்த வித அச்சமும் அடைய தேவையில்லை.
விரைவில் துறைமுகம் அமைக்க அரசு உத்தரவு பிறப்பிக்கும். அதனால் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட வேண்டும்,' என்றனர்.
அதன் பின் மீனவர்கள் 1:00 மணிக்கு ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.